திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், ஏன் திருப்பரங்குன்றம் விஷயம் குறித்து பேசவில்லை என, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக தனித்து போட்டியிடுகிறது. ஆனால், என்டிஏ கூட்டணியில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இதற்கும் விஜய் நோன்பு நிகழ்ச்சியில் பதிலளித்திருக்கிறார்.

விளக்கம் கொடுத்த விஜய்
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், "நாம அரசியலுக்கு வந்ததிலிருந்தே, சில வதந்திகள் வருது. குறிப்பா அந்த டீம், இந்த டீம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் எந்த டீமும் கிடையாது, மக்களோட டீம். இந்த உண்மை தெரிந்த பின்னர், வேறு என்ன அவதூறு பரப்பலாம் என்பதை முயற்சித்து, தோல்வியடைந்திருக்கிறார்கள்.
மதச்சார்பற்ற சமூகநீதி
எனவே கடைசியில், விஜய் இந்த கூட்டணியில் சேருகிறார், இந்த கூட்டணியில் சேருகிறார் என்று பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் கேட்டு நீங்கள் குழம்பியிருக்கலாம். இதனால் இங்கு ஒரு விஷயத்தை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான், நாங்கள் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கை என்கிற நிலைப்பாட்டில், மதச்சார்பற்ற சமூகநீதி என்கிற நிலைப்பாட்டில் சமசரம் செய்ய மாட்டோம்.
நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசியலில் யாருக்காவும், எதற்காகவும் சமரசம் இல்லை" என்று பேசியிருந்தார். அவரது பேச்சு கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில், விஜய்க்கு தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியிருக்கிறார். இவ்வளவு பேசும் விஜய், ஏன் திருப்பரங்குன்றம் விஷயத்திற்கு பேசவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சரமாரி கேள்வி
அவர் பேசியதாவது, "விஜய் இப்தார் நிகழ்ச்சியை நடத்தி இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதில் எங்களுக்கு விமர்சனம் இல்லை. அதேநேரம் அவர் பேசிய கருத்துகளுக்கு எதிர் விவாதம் வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. விஜய் தன்னையும் தன்னுடைய கட்சியையும், மதச்சார்பற்ற ஜனநாயகவாதி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மௌனமாக இருந்த விஜய்
ஆனால், நம்முடைய கேள்வி என்னவென்றால் திருப்பரங்குன்றம் பிரச்சினை பற்றி எரிந்த போது.. மொத்த தமிழ்நாடும், தமிழ்நாட்டின் அமைதியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிலும், அணியிலும் இருந்தது. அந்த நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை? என்ற வருத்தம் பரவலாக இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடம் மட்டுமல்ல, சிறுபான்மையினரிடம் மட்டுமல்ல பொதுமக்களிடமும் இந்த கேள்வி இருந்தது.
ஏன் பேசவில்லை?
ஏன் ஒரு முக்கியமான வாய்ந்த, பதற்றமான விவகாரத்தில் கருத்து சொல்லவில்லை? என்ற ஆதங்கம் இருந்தது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தியாவில் பல இடங்களில், பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த அப்பாவி கிறிஸ்தவர்கள் மீதும், கிறிஸ்தவ குருமார்கள் மீதும், வலதுசாரி சங்பரிவார் சக்திகள் நடத்தினார்கள். அந்த தாக்குதல் குறித்தும் விஜய் வாய் திறக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தன்னை பாஜகவோடு தொடர்புபடுத்தி பேச வேண்டாம் என்று கூறும் விஜய், ஏன் வலதுசாரி சக்திகளை கண்டிக்கவில்லை, கருத்துக்கூறவில்லை" என்று கேள்வி எழுப்பிருக்கிறார்.












Click it and Unblock the Notifications