நாளைக்கு தான் கச்சேரியே! விஜய்க்கு சட்டமன்றத்தில் முதல் டெஸ்ட்! சபாநாயகர் தேர்தல் எப்படி நடக்கும்?
சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள முதல்வர் விஜய், இன்று முதல் முறையாக தமிழக சட்டமன்றத்தில் காலடி எடுக்க உள்ளார். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் நடைமுறைகள் என்ன? எப்படி நடக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்..
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை எட்ட முடியாத சூழலில் இருந்தது. இதையடுத்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120 உறுப்பினர்களின் பலத்தை பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்காலிக சபாநாயகர்
இந்த நிலையில், சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் நாளை பேரவைத் தலைவர் (சபாநாயகர்) மற்றும் துணைத் தலைவர் (துணை சபாநாயகர்) தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது. இதனால், முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சட்டமன்ற அமர்வு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் தேர்தல்
சட்டமன்றச் செயலக அறிவிப்பின்படி, பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறும். சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர், தேர்தலுக்கு முன்பாகவே தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை ஒரு உறுப்பினர் முன்மொழியவும், மற்றொருவர் வழிமொழியவும் வேண்டும்.
குரல் வாக்கெடுப்பு
சட்டமன்றம் கூடியதும் தற்காலிக சபாநாயகர் அமர்வை நடத்துவார். ஒரே ஒருவர் மட்டும் போட்டியிட்டால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும். பொதுவாக குரல் வாக்கெடுப்பு அல்லது கைநிறுத்தி வாக்களிக்கும் முறை பின்பற்றப்படும். தேவைப்பட்டால் ரகசிய வாக்கெடுப்பு அல்லது பிரிவு வாக்கெடுப்பும் நடத்தப்படலாம். பெரும்பான்மை ஆதரவைப் பெறும் வேட்பாளர் சபாநாயகராக அறிவிக்கப்படுவார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து செல்வது மரபு. அதன் பிறகு துணைச் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். சபாநாயகர் தேர்தலுக்கு பிறகு, விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வர உள்ளது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியை உறுதிப்படுத்தும்.
தவெக கூட்டணி
தற்போதைய அரசியல் சூழலில், தவெக கூட்டணியின் ஒற்றுமை, அதிமுகவில் உருவாகியுள்ள கிளர்ச்சி, எதிர்க்கட்சியாக உள்ள திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பன உள்ளிட்ட பல அரசியல் பரபரப்புகளுக்கிடையே நாளைய சபாநாயகர் தேர்தல் தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications