சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்!
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்கிறார். சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்குள் நுழைந்து, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த விஜயின் செயல்பாடுகள் குறித்து தற்போது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பரவலான விவாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் 12-வது முதல்வராக விஜய் பதவியேற்றார். பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.

பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டது அரசின் முதல் அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்புக்காக "சிங்கப்பெண்" சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக தனிப்படை அமைத்தல் ஆகிய அறிவிப்புகள் இருந்தன.
தமிழக வெற்றிக் கழகம்
அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் அறிவித்தார். முந்தைய ஆட்சியால் தமிழகத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற உறுதியையும் அளித்தார். ஆட்சியின் முதல் வாரத்திலேயே கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கடைகள் அடையாளம் காணப்பட்டு, முதற்கட்டமாக பல கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தவெக அரசு
அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைந்தனர். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
விஜய் சாதனைகள்
விவசாயிகளுக்கும் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. குறு விவசாயிகள் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் முடிவு, கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 14 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்தது.
சட்டம் ஒழுங்கு துறையிலும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
விஜய் ஆட்சி
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் நேரடியாக உத்தரவிட்டார். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற விஜய், பிரதமரை சந்தித்து மேகதாது அணை, தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் கோவை, மதுரை, ஓசூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்ட நிதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
விஜய் சவால்கள்
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரும் வகையில் டெண்டர் நடைமுறைகள், கட்டிட அனுமதி செயல்முறைகள் உள்ளிட்டவற்றில் சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. லஞ்சம், முறைகேடு தொடர்பான புகார்களில் சில அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனினும், இந்த ஒரு மாத ஆட்சியில் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. மாநிலத்தின் பல பகுதிகளில் மின் தடை, குடிநீர் பிரச்சினை, குப்பை அகற்றும் பணிகளில் தாமதம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சவால்கள் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு
ஆனால், ஆளுங்கட்சி தரப்பினர் வேறுபட்ட கருத்தை முன்வைக்கின்றனர். முந்தைய காலங்களில் மறைக்கப்பட்ட பல குற்றங்கள் தற்போது வெளிப்படையாக பதிவு செய்யப்படுவதால் குற்றங்கள் அதிகரித்தது போன்ற தோற்றம் உருவாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதால் சில பணிகள் திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
30 நாள் ஆட்சி
ஒரு மாத கால ஆட்சியை வைத்துப் பார்த்தால், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் முயற்சிகளில் விஜய் அரசு தீவிரம் காட்டியிருப்பது தெரிகிறது. அதே நேரத்தில் நிர்வாக அனுபவமின்மை காரணமாக சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை முழுமையாக வழங்க இன்னும் கால அவகாசம் தேவைப்படலாம் என்ற கருத்தும் அரசியல் நோக்கர்களிடம் நிலவுகிறது. தற்போதைய சூழலில் முதல்வர் விஜயின் முதல் ஒரு மாத ஆட்சி சாதனைகளும் சவால்களும் கலந்த தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் அவரது அரசு எடுக்கும் முடிவுகளே இந்த ஆட்சி உண்மையில் சாதனையா அல்லது வேதனையா என்பதை தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications