எம்ஜிஆர், ஜெ, கருணாநிதி ரோல் மாடலா.. அப்போது அந்த கொள்கைத் தலைவர்கள் யார்? விஜய்க்கு சீமான் கேள்வி!
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ரோல் மாடல் என்றால், கொள்கைத் தலைவர்கள் 5 பேர் யார் என்று விஜய்க்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தெந்த விஷயங்களில் இருந்து விஜய் யாரை எடுத்துக் கொண்டார் என்பதை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யுடன் என்டிடிவி தொலைக்காட்சி நிர்வாகிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். அந்த சந்திப்பின் போது கேமரா இல்லாமல் விஜய் நேர்காணல் கொடுத்ததாக என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் விஜய்யை பார்த்து பேசிய என்டிடிவி ஊழியர்கள் நேர்காணல் அளித்துள்ளனர். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

அதேபோல் அந்த நேர்காணலில் தவெக தலைவர் விஜய், சினிமாவில் ஷாரூக் கான் என்னுடைய ரோல் மாடல். அதேபோல் அரசியலில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ரோல் மாடல் என்று தெரிவித்துள்ளார். திமுகவை தீயசக்தி என்று விமர்சித்து வந்த விஜய், திடீரென கருணாநிதியை ரோல் மாடல் என்று கூறி இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் ரோல் மாடல் கருத்து தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எந்த விஷயத்தில் விஜய் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் ஜெயலலிதா ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்.
எம்ஜிஆர் பயிற்று மொழியாக இருந்த தமிழை நீக்கிவிட்டு ஆங்கிலத்தை கொண்டு வந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ரோல் மாடல் என்றால், கொள்கைத் தலைவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 5 யார்? நான் எங்களின் தலைவர்களை எதில் இருந்து எடுத்துக் கொண்டேன் என்று சொல்லியதை போல், விஜய்யும் சொல்ல வேண்டும்.
ஜெயலலிதாவிடம் இந்தந்த முடிவுகள் எனக்கு உடன்பாடு என்று சொல்ல வேண்டும் தானே.. அப்போ கொள்கைத் தலைவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 5 பேர்களில் யாரும் ரோல் மாடல் இல்லை போல.. விஜய்யின் விருப்பம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், காமராசர் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர் கொள்கைத் தலைவர்கள் என்று அறிவித்தார்.
இதையடுத்து மதுரை மாநாட்டில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரையும் விஜய் தழுவிக் கொண்டார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயலலிதா சமாதியிலும் சென்று அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதனால் விஜய்யின் முடிவில் குழப்பம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications