நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.. தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு! விஜய் அதிரடி
சென்னை: மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், நீட் விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல மாணவர்களை அவர் சந்தித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இதனை தொடர்ந்து அவர், 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியையும் தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். கடந்த முறையை போல அல்லாமல் இந்த முறை, இரண்டு வெவ்வேறு நாட்களாக மாணவர்களை விஜய் சந்திக்கிறார். அந்த வகையில் முதல் சந்திப்பு கடந்த 28ம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாவது கட்ட விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் என 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசு பொருட்கள் மற்றும் உதவி தொகையையும் விஜய் வழங்குகிறார்.
740 மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தமாக 3500க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கடந்த முறை அதிகாலை 6 மணிக்கே விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார். இந்நிலைவயில், இன்றும் 7 மணியளவில் மண்டபத்திற்கு வந்திருக்கிறார்.
அரசியல் கட்சியின் தலைவராக மாணவர்களை முதல் முறையாக கடந்த 28ம் தேதி சந்தித்த விஜய், மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார். இந்த உரை தமிழக அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதேநேரம், இரண்டாவது விழாவில் உரையாற்ற போவதில்லை என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், தற்போது திடீர் ட்விஸ்ட்டாக, மாணவர்கள் மத்தியில் உரையாற்ற போவதாக அறிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக அவருடைய நடவடிக்கை தமிழக அரசுக்கு ஆதரவானது போன்று இல்லை. அதே நேரம், வெளிப்படையாகவும் மத்திய அரசை எதிர்க்கவில்லை. இப்படி இருக்கையில் இன்று மாணவர்கள் மத்தியில் அவர் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் பேசியதாவது, "இந்த விழாவில் எதையும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த விஷயம் குறித்து பேசாவிட்டால் சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். நீட் தேர்வால் தமிழகத்தின் கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வை மூன்று பிரச்னைகளாக பார்க்கிறேன்.
முதலில் இந்த தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975க்கு முன்னாள் கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதன் பின்னர் ஒன்றிய அரசு கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்து. இதுதான் முதல் பிரச்னை. இரண்டாவதாக, ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே கல்வி என்பது கல்விக் கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. மாநிலங்களுக்கு ஏற்றார் போல பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இது மாநில உரிமை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, கல்வியின் விரிவான கண்ணோட்டம் சம்பந்தப்பட்டதும் கூட.
மாநில வழி கல்வியில் பயின்றுவிட்டு NCRT சிலபஸில் தேர்வு வைப்பது என்பது சரியா இருக்குமா? கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
மூன்றாவதாக, சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாக செய்திகள் வந்தன. இதனால் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் சுத்தமாக போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை என்பதைதான் இந்த செய்திகள் மூலமாக நாம் புரிந்துக்கொண்ட விஷயம்.
கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு என்னதான் தீர்வு என்றால், நீட் ரத்துதான் தீர்வு. நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக சட்டமன்றம் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு காலத்தாமதம் செய்யாமல் விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான நிரந்தர தீர்வு என்பது, பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வியை கொண்டுவருவதுதான். அதற்கு காலத்தாமதம் ஏற்படுமாயின், அரசியலமைப்பில் திருத்தம் செய்து சிறப்பு பொதுப்பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியையும் சுகாதாரத்தையும் சேர்க்க வேண்டும். இப்போதுள்ள பொதுப்பட்டியலில், மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ உள்ளிட்ட கல்லூரிகளுக்கு நீட் தேவையெனில் நடத்திக்கொள்ளலாம். ஆனால் இது உடனே நடக்காது. அப்படியே நடந்தாலும், அதை நடக்க விடமாட்டார்கள் என்பது தெரியும். இருப்பினும் இதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விருப்பப்பட்டேன்" என்று கூறியுள்ளார்.
இன்று திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வு விலக்கு கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜய் நீட்-க்கு எதிராக பேசியிருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications