விஜய்க்கு பயப்படுகிறதா திமுக? ஏன் கைது பண்ணல? அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரிப்ளை!
சென்னை: விஜய்க்கு அரசியலில் போதுமான அளவுக்கு பக்குவம் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யை பார்த்து மட்டுமல்ல, திமுக யாரைப் பார்த்தும் அஞ்சாது என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜா அருகே உள்ள லாலாப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன்? அவர் கைது செய்யப்படுவாரா? திமுக அவரை பார்த்து பயப்படுகிறதா? என்று கேட்கிறீர்கள். திமுக ஒருபோதும் யாரையும் பார்த்து அஞ்சியதில்லை. இனி அஞசப் போவதும் இல்லை. அஞ்ச வேண்டிய அவசியமும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை.
பாஜக உள்பட தேசிய கட்சிகளுக்கும் திமுக அஞ்சியதில்லை. எங்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும், நாங்கள் அதனை நேர்மையாக எதிர்கொள்வோம். எப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கான எங்களின் சேவையை தொடர்ந்து கொண்டு இருப்போம். கடந்த காலங்களிலும் இது தான் நடந்துள்ளது. இனியும் இது தான் நடக்கும்." என்றார்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு வெளியிட்ட வீடியோவில் விஜய் வருத்தம் தெரிவிக்காமல் முதல்வருக்கு சவால் விடுவது போல பேசியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, "விஜய்க்கு அரசியலில் போதுமான பக்குவம் இல்லை. அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது" என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications