எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. தமிழக அரசியலில் நொடிக்கு நொடி ட்விஸ்ட்! விஜய் எடுக்கப் போகும் முடிவு!
சென்னை: இன்னும் சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் எதிர்பாராத சில சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை. இந்த நிலையில் கடைசி கட்டமாக ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஜய். இந்த நிலையில் விஜய் ஆட்சி அமைப்பாரா? அல்லது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பாரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் நீடித்து வருகிறது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம்.

இந்த நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தவெக தற்போது ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை இன்னும் நிரூபிக்க முடியவில்லை.
ஆர்.வி.அர்லேகர்
இதனால் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத நிலை தான் தம்மிடம் உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, தேர்தல் முடிவுகள் வெளியான உடனே கூட்டணி ஆதரவை பெற முயற்சிகளை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
காங்கிரஸ்
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி காங்கிரஸ் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார். இருப்பினும், 118 உறுப்பினர்களின் முழு ஆதரவு பட்டியல் இல்லாததால், ஆளுநர் உடனடி அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையில் நேற்று மீண்டும் ஆளுநரை சந்தித்த விஜய், சட்ட ரீதியான பல்வேறு ஆவணங்களையும், அரசியலமைப்பு சட்ட விளக்கங்களையும் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
தனிப்பெரும் கட்சி
சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், "ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்ய வேண்டும். தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அழைப்பு வழங்க இயலாது" என ஆளுநர் தெளிவாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை தவெக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தவெக வாதமாக உள்ளது.
கூட்டணி ஆதரவு
அதே நேரத்தில், ஆளுநர் மாளிகை தரப்பில், "சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது அரசை அமைப்பதற்கான அடிப்படைத் தகுதி" என்ற விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கு பிறகு, தவெக நிர்வாகிகள் கூட்டணி ஆதரவை திரட்டுவதில் முழு வேகத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். மேலும், "எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்" என தவெக தரப்பு உறுதியளித்திருப்பதும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தவெக தலைவர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனையும் தவெக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். ஆனால், "திமுக எடுக்கும் முடிவே எங்களது நிலைப்பாடு" என IUML தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுடனும் தவெக தலைவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், திமுக கூட்டணிக்குள் கூட புதிய அரசியல் அழுத்தம் உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
குடியரசு தலைவர் ஆட்சி
இந்நிலையில், "தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என்று சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், ஆளுநர் தரப்பு சட்ட ரீதியான பாதுகாப்பை முன்னிறுத்தி மிக கவனமாக செயல்படுகிறது. தற்போது தமிழக அரசியலில் அடுத்த சில மணி நேரங்களே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விஜய் தேவையான ஆதரவை திரட்டுவாரா? அல்லது தமிழகம் மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சியில் சிக்குமா? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications