விஜய் விஜயம்..கரூர் போவது உறுதி! தேதி பின்னர் அறிவிக்கப்படும்! உச்சகட்ட குழப்பத்துல விஜய்! தடதட தவெக
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். நாளை கரூருக்கு விஜய் செல்ல இருப்பதாக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டதோடு, திருமண மண்டபமும் புக் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் விஜய்யின் கரூர் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை விஜய் கரூருக்கு செல்ல மாட்டார் எனவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, நடிகரும் தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டிருந்த கரூர் பயணம் தள்ளிப்போயுள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி விஜய் கரூருக்கு வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விஜய் வருவதாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் கடந்த வாரமே காவல்துறையிடம் அனுமதி கோரினர்.

கரூர் கூட்ட நெரிசல்
டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தபின், கரூர் எஸ்.பி. அலுவலகத்திலும் கடிதம் அளிக்கப்பட்டது. இதற்காக, கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஹோட்டல் ஏற்கெனவே தவெக கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருப்பதால், வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
விஜய் ஆறுதல்
இந்நிலையில், விஜய் வருகை குறித்து தகவல் பரவியதும், பெரும் ரசிகர் கூட்டம் திரள்வது உறுதியாக இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் சிக்கல்கள் எழுந்துள்ளன. மேலும், கரூர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்கள், "அதிக கூட்டம், பாதுகாப்பு சிக்கல், அரசியல் அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்" எனக் கூறி, மண்டபத்தை வழங்கத் தயங்குவதாகத் தெரியவந்துள்ளது.
விஜய் கரூர் பயணம்
இதனால், விஜய்யின் கரூர் பயணத்திற்கான நிகழ்ச்சி இடத்தை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவரின் கரூர் வருகை மேலும் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு மற்றும் இடம் தேர்வு தொடர்பான சிக்கல்கள் தீர்ந்தபின் விஜய் கரூருக்கு வருவார் என்றும், அவரது வருகை தீபாவளிக்குப் பிறகே இருக்கக்கூடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் விஜயம் ஒத்திவைப்பு
குறிப்பாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உயிரிழந்தோர் குடும்பம்
தவெக தலைவர் விஜய், உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார். இதையடுத்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், விஜய் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசியும் ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இருந்தே விஜய் கரூர் செல்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அவர் எப்போது தான் கரூர் வருவார் என குழப்பத்தில் இருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications