இன்னும் எத்தனை நாளைக்கு.. "வொர்க் ஃப்ரம் ஹோம்" அரசியல்.. தவெக விஜய் என்ன செய்ய போகிறார்? விரக்தி?
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரப் பணி கோரியும் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர். சட்ட உதவி உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக விஜய் போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தார்.

தற்காலிக பணியாளர்கள்
ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் சுமார் 150 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் பணியைத் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
சென்னை மாநகராட்சி வட்டாரங்களின்படி, நேற்று முதல் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலங்கள் V மற்றும் VI) திடக்கழிவு மேலாண்மைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் மூலம் சுமார் 150 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் பணியைத் தொடங்கினர். வரும் நாட்களில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜய் துப்புரவு பணியாளர்கள் சந்திப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர். சட்ட உதவி உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக விஜய் போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தார்
ரிப்பன் மாளிகையில் (மாநகராட்சி தலைமை அலுவலகம்) கடந்த 11 நாட்களாகப் போராடி வரும் ஊழியர்கள், அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, விஜய் போராட்டக்களத்திற்கு வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தனர். "ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ரிப்பன் மாளிகைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய கூட்டம் கூடும் வாய்ப்பு இருந்ததால், வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்தினோம். அதற்குப் பதிலாக, இன்று அவரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை விளக்கினோம்" என்று ஊழியர்களில் ஒருவர் தெரிவித்தார்.
விஜய் நேரில் வரவில்லை
"நான் உங்களை ஒரு கடினமான சூழ்நிலையில் சந்திக்கிறேன். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். உங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படுகிறோம்" என்று விஜய் கூறியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். எனினும், போராட்டக் களத்தில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்ப்பதாகக் குற்றம் சாட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களிடம் இருந்து இந்தச் சந்திப்பு விமர்சனங்களைப் பெற்றது.
பா.ஜ.க. மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் கூறுகையில், "விஜய் ரிப்பன் மாளிகைக்குச் செல்லவில்லை. ஆனால், 11 நாட்களுக்குப் பிறகு போராட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஊழியர்களைப் பனையூருக்கு வரச் சொன்னார். இது வெறும் பேச்சுதான், செயல் அல்ல" என்றார். பல பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை 'வீட்டில் இருந்து வேலை செய்யும்' மற்றும் 'கார்பரேட்' அரசியல்வாதி என்று விமர்சித்தனர்.
தமிழக வெற்றி கழகம் தூய்மை பணியாளர்கள்
இதற்குப் பதிலளித்த தமிழக வெற்றி கழகம், பாதுகாப்பு காரணங்களுக்காகவே சந்திப்பு இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறியது. கடலூர் மற்றும் வடசென்னையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை மரணங்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட பல்வேறு குழுக்களை தனது கட்சி அலுவலகத்தில் சந்தித்து விஜய் விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் "வொர்க் ஃப்ரம் ஹோம்" அரசியல்
முக்கியமாக விஜய் "வொர்க் ஃபர்ம் ஹோம்" அரசியல் செய்வதாக கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. தமிழக அரசியலில் பெரிய ஆரவாரத்தோடு நுழைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் இதுவரை பெரிய "சம்பவம்" எதையும் செய்யவில்லை. அரசியலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கடுமையான வலிமையான எதையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் விரக்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன.
ஆந்திர பிரதேச அரசியலில் பவன் கல்யாண் செய்த போராட்டம் ஒன்று அவரின் அரசியல் வாழ்க்கையை மாற்றியது. கடந்த 2023ம் ஆண்டு நந்தியாலா பகுதியில் அதிகாலை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு கைதுசெய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை ஆதரிப்பதற்காக பவன் கல்யாண் விஜயவாடா நோக்கிச் சென்று போராட்டம் செய்தார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்தபோது, அவரது வாகன அணிவகுப்பு இரண்டு முறை தடுக்கப்பட்டது. ஜீப் மீது அமர்ந்தபடி இவர் வேகமாக சென்ற பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அதன்பின் இவரின் ராலி தடுக்கப்பட்டது.
பவன் கல்யாண் - விஜய் அரசியல்
இதனால் கல்யாண் தனது வாகனத்திலிருந்து இறங்கி விஜயவாடாவில் உள்ள மங்களகிரி நோக்கி நடந்து செல்ல வேண்டியதாயிற்று. விஜயவாடாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதால், கல்யாண் அனுமாஞ்சிபள்ளியில் சாலையில் படுத்து போராட்டம் செய்தார். அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மாநில அரசையும், போலீசாரையும் எதிர்த்து அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றதோடு.. அவரின் அரசியலை புரட்டி போட்டது. அதோடு சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் கூட்டணிக்கும், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக அமைந்தது.
விஜய் விரக்தி
அங்கே அரசியலை மாற்றிய சம்பவமாக இது பார்க்கப்பட்டது. அதேபோன்ற அரசியலை விஜய் செய்வார்.. ஆளும் திமுக, பாஜக கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசியலில் பெரிய ஆரவாரத்தோடு நுழைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் இதுவரை பெரிய "சம்பவம்" எதையும் செய்யவில்லை. அரசியலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கடுமையான வலிமையான எதையும் எடுக்கவில்லை.
விஜய் பெரிதாக போராட்டம் எதையும் மேற்கொள்ளவில்லை. களத்தில் நேரடியாக சென்று கடுமையான போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. அஜித் குமார் காவல் கஸ்டடி மரணத்தில் மட்டும் விஜய் போராட்டம் செய்தார். ஆனால் அதுவும் கூட 15 நிமிடம் மட்டுமே நடந்த போராட்டம் ஆகும். அந்த போராட்டம் பெரிய அழுத்தங்களை சந்திக்கவில்லை.
பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஒருமுறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி களத்தில் மக்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுடன் ஓரணியில் இணைவோம், உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களின் மூலம் மக்களை சென்று சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் அரசியலில் இன்னும் முழுமையாக கால் பதிக்காத விஜய்.. இதுவரை மக்களை சென்று பார்க்கவில்லை. விஜய் நடத்துவதாக இருந்த பேரணியும், நடைபயணமும் கூட இப்போது வரை தொடங்கவில்லை. இப்படி தொடர் சரிவுகளில்.. சூழ்நிலை பவன் கல்யாண் அளவிற்கு இல்லையே.. அவர் அளவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியுமா என்று விஜய் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications