சி.ஜோசப் விஜய் எனும் நான்.. முதல் நாளில் 2 கையெழுத்து! குஷியில் குடும்பஸ்தன்கள்! இந்த இரு திட்டமா?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். தான் சந்தித்த முதல் தேர்தலில் இரு பெரும் திராவிட கட்சிகளை ஓடவிட்டு ஆட்சி அமைக்கப் போகிறார் விஜய். இந்த நிலையில் நாளை விஜய் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பதவியேற்கும் அதே மேடையில் இரு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்து விஜய் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ள சூழலில், விஜய் நாளை முதல்வராக பதவியேற்கிறார் என்ற தகவல் அவரது ஆதரவாளர்களை உற்சாகத்டை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக் தற்போது ஆட்சி அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் பகுதியில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்திய தவெக, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து வருகிறது. இதற்கிடையில், கட்சியின் சட்டமன்றக் குழுக் கூட்டத்தில், ஒருமனதாக விஜய் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.
முக்கியமாக, விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது.
விஜய் பதவியேற்பு விழா
அதற்கான முடிவாக திருச்சி கிழக்கு தொகுதியை விலக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ள விஜய், நாளை பதவியேற்கத் தயாராக இருப்பதாகவும், இரண்டு வாரங்களுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் அழைப்பு விடுத்தவுடன் பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளனர்.
விஜய் கையெழுத்து
இதில் பல புதிய முகங்களும், சில அனுபவமுள்ள தலைவர்களும் இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது அரசியல் ரீதியாகவும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. பதவியேற்ற உடனேயே மக்கள் நலன் சார்ந்த இரண்டு முக்கிய திட்டங்களை அமல்படுத்தும் வகையில் கோப்புகளில் விஜய் கையெழுத்திட உள்ளார் என கூறப்படுகிறது.
200 யூனிட் இலவச மின்சாரம்
அதன்படி, தகுதியான வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது.
புதிய அரசு
இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள், விழா நடைபெறும் இடத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் உருவாகும் புதிய அரசு எப்படி இருக்கும், அவர் அளித்த வாக்குறுதிகள் எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications