"சினிமாவை போல அரசியலிலும் ஜெயிப்பார் விஜய்.." சென்னை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்
சென்னை: சினிமாவை போல நடிகர் விஜய் அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என்றும்.. விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் விஜய் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபாடு செய்துள்ளனனர்.
தமிழக அரசியலுக்கும் திரையுலகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் திரையுலத்தை சேர்ந்தவர்கள் தான்.
இப்போதும் கூட விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் அரசியல் கட்சியை நடத்தி வருகின்றனர்.

பின்வாங்கிய ரஜினி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட திரையுலக பிண்ணனி கொண்டவர்தான். பிரபலமான பல நடிகர் நடிகைகளும் அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு தேர்தல் சமயத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.

கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்..
அதேபோல தமிழ் திரையுலகின் மற்றொரு உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட பணிகளை ஒருபக்கம் செய்து வருகிறார். இதனால், விஜய்யும் கண்டிப்பாக அரசியலில் வருவார் என்று அவரது ரசிகர்கள் பலரும் திடமாக கூறி வருகின்றனர். இதற்கிடையே விஜய் சினிமா துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அடித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

அரசியலில் சாதிப்பார் என போஸ்டர்கள்
தற்போது வரை 30 ஆண்டுகள் முடிவற்ற நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தேனியில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் 30 ஆண்டுகாலம் சினிமா துறையில் சாதித்த விஜய் வரும் 30 ஆண்டுகாலம் அரசியலில் சாதிப்பார் என்றும் நாளைய முதல்வர் விஜய் என்று போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஓட்டப்பட்டு இருந்த போஸ்டர்களில், விஜய் தலைமையில் கூட்டணி என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தங்க தேர் இழுத்து வழிபாடு
அதேபோல், நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். சினிமாவில் சாதித்தது போல அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும் என்றும் வழிபாடு நடத்தியதாக தங்கதேர் இழுத்த விஜய் ரசிகர்கள் கூறினர். விஜய் அரசியலுக்கு வர வெண்டும் என்று அழைப்பு விடுத்தும் அவரது ரசிகர்கள் அடிக்கும் போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்திலும் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு
விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்திலும் அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு படம் மோத இருக்கிறது. துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் கடந்த வாரம் நடிகர் விஜய் தனது ரசிகர்களை திடீரென சந்தித்தார். நடிகர் விஜயின் இந்த சந்திப்பு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications