படிச்சவங்க அரசியலுக்கு வரணும் என பேசிய விஜய்.. தமிழக அமைச்சர்கள், MLAக்களின் கல்வி தகுதி தெரியுமா?
சென்னை: "நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்" என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். விஜய்யின் பேச்சு தமிழகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்களில் பட்டதாரிகள் எவ்வளவு பேர் தெரியுமா? அதை இந்த கட்டுரையில் நீங்களே தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய விஜய், நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர். "நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா?" என விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கிலிருந்தவர்கள் ஆரவாரம் செய்ததையடுத்து, "உங்களின் ஆர்வம் புரிகிறது, இப்போதைக்குப் படியுங்கள், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்," எனத் தெரிவித்தார்.
நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விஜய் கூறியுள்ள நிலையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் பட்டதாரிகள் தான்.
தற்போதைய தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையானோர் நன்கு படித்தவர்கள், பட்டதாரிகள். அதிலும் ஒருபடி மேலே போய், திமுக எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களில் 9 பேர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள எம்.எல்.ஏக்களில் 89 பேர் பட்டதாரிகள். 55 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். 90 பேர் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் ஆனால், கல்லூரி போகாதவர்கள்.
அதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள எம்.எல்.ஏக்களில் 38.5% பேர் பட்டதாரிகள். 23.5 சதவீதம் பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். 38% பேர் மட்டுமே கல்லூரிப் பட்டம் பெறாதவர்கள். பட்டம் பெற்றவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள். பலர் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள்.
அமைச்சர்களைப் பொறுத்தவரை, 34 பேரில் 3 பேர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள். 24 பேர் பட்டதாரிகள். 9 பேர்தான் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள்.
மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருவிடைமருதூர் தனித் தொகுதி எம்.எல்.ஏவும், கொறடாவுமான கோவி. செழியன், மன்னார்குடி எம்.எல்.ஏவும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருக்கோவிலூர் எம்.எல்.ஏவும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க. பொன்முடி, பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஜெயராமன், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் 21 பேர் எம்.பியான நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். 3 பேர் மருத்துவர்கள். ஒருவர் பி.எச்.டி முடித்த முனைவர், சிலர் வழக்கறிஞர்கள், பலர் முதுகலை பட்டம் பெற்றவர்கள். 2 பேர் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லாதவர்கள்.
ஆக, தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களே. தமிழக சட்டசபையை அலங்கரிப்பவர்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முனைவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அதேசமயம், தற்போது அரசியலுக்கு வந்து, படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் எனப் பேசியுள்ள நடிகர் விஜய், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பில் சேர்ந்தவர். எனினும், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்தினார். எனவே அவர் பட்டம் பெறவில்லை.
தமிழ்நாட்டை ஆண்ட பல தலைவர்கள் கல்லூரி படிப்பை முடிக்காதவர்களே. தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி செய்த காமராஜர் தொடங்கி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் பட்டதாரிகள் இல்லை. எனினும், தமிழ்நாடு, இந்தியாவின் பல மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதை மறுக்க முடியாது.
மேலும், கடந்த தலைமுறையில் படிக்காத சீனியர்கள் இப்போது அரசியலில் இருக்கிறார்கள். அவர்களை படிக்கவில்லை என்பதால் வெளியே போங்க என சொல்லிவிட முடியாது. ஆனால் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் அத்தனை பேருமே நன்கு படித்தவர்கள்தான். ஏனெனில் அதுதான் உலக நடப்பு. படிக்காதவர்கள் இப்போதெல்லாம் யாருமே இல்லை என்ற நிலைதான் உள்ளது.
படித்தவர்கள் வர வேண்டும் என்று விஜய் பேசியது நல்ல விஷயம்தான். ஆனால் ஏற்கனவே படித்தவர்கள் அதுவும் மெத்தப் படித்தவர்கள்தான் தமிழ்நாட்டின் சட்டத்தை இயற்றும் அவையிலும், அதிகார இருக்கையிலும் இருக்கிறார்கள் என்பதை விஜய் கவனிக்க மறந்தது ஏனோ?












Click it and Unblock the Notifications