உலகத்திலேயே கொள்கை இல்லாமல் கட்சி ஆரம்பித்தவர் விஜய்தான்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு
சென்னை: எதற்காக தவெக கொடியில் இரண்டு யானைகள் காலை தூக்கி நிற்கின்றன. சர்க்கஸ் யானையா?. உலகத்திலேயே கொள்கை இல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பிக்கும் சாதனையை செய்தவர் விஜய்தான். விஜய் காங்கிரஸ், திமுக கட்சியில் இணைந்திருக்கலாம். எதற்காக தனி கட்சி என்று நடிகர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டு பந்தல், வாகன நிறுத்துமிடம், சமையல் கூடம், நுழைவாயில் ஆகியவை அமைக்கு பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடுக்கான பந்தல் கால் இன்று அதிகாலை ஊன்றப்பட்ட நிலையில், தொண்டர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் நடிகரும் கட்சித் தலைவருமான விஜய். மாநாடு முடியும் வரை ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்க வேண்டும் எனவும், நம்மைப் பற்றி நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: உலகத்திலேயே இல்லாத ஒரு அதிசயம் தவெக கட்சி. உலகின் எட்டாவது அதிசயமாக விஜய் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா இடங்களிலும் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. கட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்துக் கட்சிகளுக்கும் கொள்கை, கோட்பாடு, கொடி உள்ளது. அந்தக் கொடிகளுக்கு ஒரு அர்த்தம் உள்ளது. தவெக தலைவர் விஜய் கட்சியின் கொடியை வெளியிட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.
அந்தக் கொடி எதற்கு என்று அவருக்கும் புரியவில்லை, நமக்கும் புரியவில்லை. எதற்காக அந்தக் கொடியில் இரு யானைகள் காலை தூக்கி நிற்கின்றன. சர்க்கஸ் யானையா. இல்லை வேறு எதற்காகவாவது தயாராகிக் கொண்டிருக்கின்றனவா. எதுவே புரியவில்லை. கட்சிக் கொள்கை என்ன என்று கேட்டால் மாநாட்டில் சொல்கிறேன் என்கிறார்.
உலகத்திலேயே கொள்கை இல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பிக்கும் சாதனையை செய்தவர் விஜய்தான். 40, 60 வயதிற்கு மேலேயேும் நடிக்கலாம் என்று சொல்லப் போகிறாரா. எனவே, விஜய் முதலில் தெளிவு பெற வேண்டும். பின்னர், மக்களுக்கு தெளிவடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் விரும்புகின்ற ஒரு பிள்ளையாக விஜய் இருக்கும்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
அவர் சொல்கின்ற கொள்கையை, விரும்புகின்ற கொள்கையை நிறைவேற்றுகிற கட்சியாகத்தான் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் விஜய் சேரலாம். ஆனால், தயவுசெய்து சீமானோடு மட்டும் சேராதீர்கள். விஜய் வருவதால் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அவரால் ஒரு கட்சிக்கு வாக்கு வங்கி வரும், அல்லது வராது என்பதெல்லாம் நடக்காது. அவர் ஒரு மக்களை மகிழ்விக்கும் நபர். மக்கள் அவரை ஒருபோதும் வழிகாட்டும் நபராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications