விஜய் முடிவால் பாஜகவுக்கு எரிச்சல்! "அந்த" 5 எம்எல்ஏக்களால் பதவியேற்பு விழாவுக்கு சிக்கல்!
சென்னை: விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளி போவதற்கு காரணமே காங்கிரஸ்தான் என பத்திரிகையாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த காங்கிரஸால் எப்படி இது நடந்தது என்பதை பார்க்கலாம்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 108 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் அவர் சமர்ப்பித்தார். இருப்பினும், 118 என்ற மேஜிக் எண்ணை எட்டாத நிலையில், திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா நடைபெறுமா என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மேலும் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றன. இந்தத் தாமதத்திற்குப் பின்னால் பாஜகவின் அரசியல் கணக்குகள் இருப்பதாகப் பேசப்படுகிறது. விஜய் காங்கிரஸுடன் கைகோர்த்ததுதான் பாஜகவை எரிச்சலடையச் செய்துள்ளதாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வழக்கமாகத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் போது, ஆளுநர், அவர்களை அழைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பளித்து, பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்குவதுதான் நடைமுறை. ஆனால், இங்கு ஆளுநர் காட்டும் தயக்கம், விஜய்யின் கூட்டணி முடிவுகளால் ஏற்பட்ட அழுத்தம் என்றே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் விஜய்யுடன் இணைந்தது பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸைப் பிரிப்பதன் மூலம் அந்த அணியை வலுவிழக்கச் செய்யலாம் என பாஜக நினைத்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் இப்போது விஜய்யுடன் இணைந்து, வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது.
இது தமிழகத்தில் பாஜகவிற்கு எதிரான ஒரு வலுவான மாற்று அணியை விஜய் தலைமையில் உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினுக்குப் பதில் விஜய் என்ற பிம்பம் உருவாவதை பாஜக விரும்பவில்லை.
மறுபுறம், அதிமுகவிலும் விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகப் பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. சி.வி. சண்முகம் போன்றோர் ஆதரவு நிலையை எடுத்தாலும், ஓ.எஸ். மணியன் போன்றோர் கூட்டணியே வேண்டாம் என்கின்றனர். எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
அதிமுகவின் ஆதரவைப் பெற்று, காங்கிரஸை விஜய்யிடமிருந்து பிரிக்க முடியுமா என்ற கோணத்திலும் சில காய் நகர்த்தல்கள் திரைமறைவில் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யைப் பொறுத்தவரை, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைத்து வரும் திருமாவளவன் போன்றவர்களுக்கு, விஜய்யின் அழைப்பு ஒரு நல்வாய்ப்பாக அமையலாம். பாஜகவின் அழுத்தங்களிலிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில், இந்த மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் விஜய்யின் பின்னால் அணிதிரள வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன.
மேலும் பாஜக ஒரு இடத்தில் வென்ற போதிலும் அதன் எதிரியான காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. அப்படி குறைந்த இடங்களில் வென்றுவிட்டு ஆட்சியில் பங்கு பெறுவதை பாஜக விரும்பவில்லை. இதே வேறு கட்சிகள் விஜய்யுடன் கைகோர்த்திருந்தால் பாஜக இவ்வளவு எரிச்சலாகி இருக்காது. ஆளுநரின் இந்த முடிவுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications