தவெக விஜயின் சுற்றுப்பயணம்.. டிசம்பர் அல்ல அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்க முடிவு! பெரிய திட்டம்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் டிசம்பர் 20 வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், தற்போது பிப்ரவரி 21 வரை தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட பயணத்தின்போது, அவர் 18 சனிக்கிழமைகளிலும், 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த புதிய கால அட்டவணை, விஜயின் மக்கள் தொடர்பு முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் நடிகர் விஜய் மேற்கொள்ள உள்ள தமிழ்நாடு சுற்றுப்பயணம் சில காரணங்களுக்காக விமர்சனங்களை பெற்று வருகிறது. முக்கியமாக இந்த பயணத்தை திட்டமிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக விஜய் - தமிழகம் முழுவதும் பயணம்
கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த மாநில அளவிலான மாநாட்டிற்கு கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் நடிகர் விஜய், செப்டம்பர் 13 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சிராப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தில், டிசம்பர் 20 வரை 38 மாவட்டங்களுக்கும் அவர் பயணம் செய்வார்.
திருச்சியில் செப்.13 ஆம் தேதி நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காந்தி மார்க்கெட் பகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் 3 நிமிடங்கள் பேசினார்.
தமிழக வெற்றிக் கழக - விஜய் பயணம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு முதல் நான்கு மாவட்டங்களுக்குச் செல்லும் விஜய், அக்டோபர் 5 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக சுற்றுப்பயணம் மேற்கொள்வார். விஜய்யின் இந்த பொது சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி, TVK பொதுச் செயலாளர் என். ஆனந்த், காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) கடிதம் மூலம் இந்த விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம்
சமூக ஊடகங்களில் வெளியான இந்த சுற்றுப்பயண அட்டவணை, சனிக்கிழமைகளில் மட்டுமே பொது நிகழ்ச்சிகளை வைத்திருப்பதால், விஜய் ஒரு "வீக் எண்டு" அரசியல்வாதியா என்ற விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது. தமிழக அரசியலில் நுழைந்த எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற பல நடிகர்களின் பட்டியலில் விஜய்யும் இணைந்துள்ளார். ஆனால் அவர்கள் அரசியலில் கடுமையாக உழைத்தனர். மக்களுடன் மக்களாக நின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளைப் பெற்றனர்.
ஆனால் வார இறுதி நாட்களில் மட்டும் பயணம் செய்வேன் என்று விஜய் வீக் எண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அதிலும் இப்போது தீபாவளி வர உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி என்பதால் மக்கள் அதற்காக வெளியே செல்வார்கள். வார இறுதி நாட்களில் சாலைகளில் கடும் கூட்டம் இருக்கும். அதுவும் வீக் என்ட் சொல்லவே வேண்டாம். அதுவும் மழை பெய்தால் ஒரு கிலோமீட்டருக்கு டிராபிக் ஆகும்.
மதுரை, திருச்சியில் விஜய் கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் நெருக்கடி அதிகமாக இருக்கும். அக்டோபர் 20 தீபாவளி. அதற்கு முன் 18ம் தேதி சனிக்கிழமை காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த நாட்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதை எல்லாம், யோசிக்காமல் விஜய் இந்த பயணத்தை திட்டமிட்டு உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்தே.. சிரமங்களை கணக்கிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் டிசம்பர் 20 வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், தற்போது பிப்ரவரி 21 வரை தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications