Vijay: இரவோடு இரவாக திருச்செந்தூர் புறப்பட்ட விஜய்.. காலையில் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்
சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று இரவோடு இரவாக விஜய் தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் புறப்பட்டுள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருச்செந்தூர் செல்ல உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி முடிந்தது. தேர்தலுக்காக அனல் பறக்க பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனது மனைவி மற்றும் மகளுடன் துபாய் சென்றுள்ளார்.

திருச்செந்தூர் செல்கிறார் விஜய்
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட பயணமாக திருச்செந்தூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி இன்று இரவு 11 மணியளவில் விஜய் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் சென்ற விஜய் அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் செல்ல உள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை 11 மணியளவில் விஜய் சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டுமின்றி தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள மும்மத வழிபாட்டு தலங்களிலும் விஜய் வழிபாடு நடத்த முடிவு செய்து இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய் வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடுகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தூத்துக்குடியில் முகாமிட்டு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முதல் முறையாக திருச்செந்தூர்
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சரியாக 7 நாட்களே உள்ள நிலையில் முடிவை எதிர்பார்த்து அரசியல் கட்சியினர் ஆர்வத்துடன் உள்ளனர். கட்சியின் வேட்பாளர்கள், தலைவர்கள் என பலரும் ஆன்மிக பயணம், கோவிலில் வேண்டுதலும் முன்வைத்து வரும் நிலையில், விஜய் நாளை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காக விஜய் தூத்துக்குடி வரும் போது கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. விஜய் திருச்செந்தூர் வருவது இதுவே முதல் முறை என்பதால் அவரை பார்க்க ஏராளமானவர்கள் திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
வெளிநாடு செல்லவில்லை
தேர்தல் முடிவு வெளியாகும் நாள் அன்று விஜய் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. ஆனால் அதனை தவெக நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பப்படும் தகவல் எனவும், விஜய் வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை எனவும் தவெக நிர்வாகிகள் கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications