எடப்பாடி பழனிசாமியின் ஈகோ.. முக்குலத்தோர் வாக்குகளை பெற விஜய்க்கு கிடைத்த அற்புதமான சான்ஸ்!
சென்னை: அதிமுகவில் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, முக்குலத்தோர் சமூக வாக்குகளை தவெக தலைவர் விஜய் அறுவடை செய்வதற்கு அற்புதமான சான்ஸ் கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர்களை சமாதானம் செய்து கூட்டணியில் இணைக்க விஜய் முயற்சிக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அதிமுகவில் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார். இதனால் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்தக் காரணத்தைக் கொண்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய 3 தரப்பையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காலில் கூட விழுகிறோம்.. எங்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிய போதும் கூட எடப்பாடி பழனிசாமி இறங்கி வரவில்லை. அதுமட்டுமல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பு வெளியேறி இருக்கிறது. இருவரும் என்டிஏ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தாலும், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வது சந்தேகம் தான்.
இவர்களால் திமுக மற்றும் நாதக உள்ளிட்டோருடனும் இணைய முடியாததால், தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. அதற்கேற்ப அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், விஜய் தலைமையில் கூட்டணி அமையக் கூடாதா? என்று ஆதரவாக பேசி இருக்கிறார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் விஜய்யை இதுவரை விமர்சிக்காமல் இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுக நிர்வாகிகளை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை விஜய் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை விஜய் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் இதுவரை எந்தக் கட்சியும் இணையவில்லை.
அதேபோல் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தாலும், மதுரைக்கு இந்தப் பக்கமான தென் மாவட்டங்களில் பெரியளவில் ஆதரவு இல்லை. குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் விஜய்க்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. அதற்கு தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாததும் முக்கியக் காரணம்.
இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்தால், முக்குலத்தோர் சமூக வாக்குகளை விஜய் கைப்பற்ற முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் விஜய்யிடம் நல்ல கரிஸ்மா இருப்பதால், அதிமுக தொண்டர்களின் வாக்குகளையும் கைப்பற்ற முடியும்.
இந்த சான்ஸை விஜய் பயன்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் சுற்றுப்பயணத்தை பொறுத்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் முடிவுகள் அமையும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications