திமுக அரசை கண்டித்து தீர்மானம்.. விடாத தவெக விஜய்.. ஆலோசனைக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் என்னென்ன?
சென்னை: சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்தது. நடிகர் விஜய் தலைமையில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த முன்னிலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏகமனதாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-
1. கொள்கைகள், கொள்கைத் தலைவர்களை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்
கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும்.
பெருந்தலைவர் காமராஜராலும் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்றுவதோடு, அவரது நேர்மையான நிர்வாகச் செயல்பாட்டையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம்.
அதேபோல, இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கிக் காட்டிய அண்ணல் அம்பேத்கரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சமூகநீதியை நிலைநிறுத்தப் போராடிய அண்ணலின் வழியை எந்நாளும் பின்பற்றுவோம்.
இந்த மண்ணைக் கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியாரின் மண் காக்கும் வீரத்தையும், சுயநலமின்றி இந்தத் தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்காகப் போராடிய மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிக் களமாடும் என்பதை இச்செயற்குழு மீண்டும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

2.கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்று, தமிழக அரசியல் களத்தில், புதிய வரலாறு படைத்திருப்பது. காலாகாலத்திற்கும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மாநாட்டுப் பணிகளுக்காக. இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும் கடுமையாக உழைத்த மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள்,
அனைத்து அணிகளின் நிர்வாகிகள். சட்டமன்றத் தொகுதிகளுக்கான தற்காலிகப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை. பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும், பந்தல் வடிவமைப்பாளர் திரு. ஜே.பி.விஸ்வநாதன் அவர்களுக்கும், மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளுக்கும், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
3.மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம்
ஆறுகள். மலைகள். கடல்கள். மண்ணின் இயற்கை வளங்கள் மட்டுமல்ல. ஒரு மண்ணின் குணநலன்களும் ஆகும். அதுபோல ஒரு கட்சியின் கொள்கைகள்தான் அக்கட்சியின் வளத்தையும் குணநலன்களையும் பேசுபவையாக இருக்கும். மேலும், அரசியல் என்பது மாநில மற்றும் மக்கள் தேவைகளையும் உரிமைகளையும் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் கொள்கைகளும் இருக்க வேண்டும். கொள்கைகள் என்பவை, மக்கள் சார்ந்தும் மண்ணைச் சார்ந்துமே இருக்க வேண்டும்.
இதை நுட்பமாக உணர்ந்ததால் மட்டுமே, இந்தத் தமிழ்நாட்டு மண்ணில் இருக்கும் அனைத்து மக்களுக்கான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மட்டுமல்லாது மக்கள் மற்றும் மாநில உரிமைகளைச் சார்ந்த நலன்களையும் பேணிப் பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் வந்தது. அதனால்தான் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் இருக்க வேண்டாம் என்ற முடிவையும் திண்ணமாக எடுத்தது.
மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு "மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்" என்று பெயர் சூட்டியுள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

4.ஜனநாயகக் கொள்கை தீர்மானம்
ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது.
ஜனநாயக நாட்டில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆளும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று. உண்மையான, நேர்மையான கருத்துகளைத் தெரிவிப்பதும் மக்களுக்காகப் போராடுவதும் எதிர்க் கட்சிகளின் கடமை மட்டுமல்ல. உரிமையும் ஆகும். அத்தகைய உரிமையை, அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் தடுக்க முயல்வதும், ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதும், சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.
5.பெண்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாரபட்சமின்றி. கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வாயிலாக உடனடியாகப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தீர்க்கமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
6.சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

7.மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்
மாநிலத்திற்கான தன்னாட்சி (State Autonomy) உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி, மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி. எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால். நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.
8.விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
9.கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம் கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று, கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications