கறுப்பு கண்ணாடி பட்டாடையில் விஜயகாந்த்.. கறுப்பு எம்ஜிஆர் என கண்ணீர் விட்டு கதறும் தொண்டர்கள்..
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிவிக்கப்பட்டு அவர் எப்போதும் அணியும் கறுப்பு கண்ணாடி அணிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலை பார்த்து கறுப்பு எம்ஜிஆர் என்று கூறி கதறி அழுகின்றனர் தொண்டர்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றினால் காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு முறைப்படி இறுதி மரியாதை செய்யப்பட்டது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் சாலிகிராமம் வீட்டிற்கு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கண்ணீர் விட்டு கதறி துடித்தார். விஜயகாந்தின் உடல் சாலி கிராமம் வீட்டில் இருந்து தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
விஜயகாந்த் உடலுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் அணியும் கறுப்பு கண்ணாடி அணிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தை பலரும் கேப்டன் என்று அன்போடு அழைத்தாலும் அவர் அரசியல் கட்சி தலைவரான பிறகு கறுப்பு எம்ஜிஆர் என்று அழைப்பார்கள்.
இன்றைக்கு அவரது மரணம் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மறைவினை கேள்விப்பட்டது முதலே பலரும் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். கறுப்பு எம்ஜிஆர்... கறுப்பு எம்ஜிஆர் என்று கதறி துடித்து அழுது வருகின்றனர்.
கோவிலுக்கு மாலை அணிந்த தொண்டர்கள் கூட விஜயகாந்த் மறைவை கேட்டு கண்ணீர் விட்டு அழுதவாறு அவரது வீட்டின் அருகே காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜயகாந்த் மறைவு அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications