கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி.. இன்று வருதா அறிவிப்பு? விஷால் வேற சொன்னாரே.. எல்லாரும் வருவாங்களா?
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பெயர் சூட்டப்படுமா? அதுகுறித்த அறிவிப்பை நடிகர் விஷால் இன்று அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்களை உலுக்கி போட்டுவிட்டது.. பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரலும், கண்ணீர் கதறலும், சென்னையை அன்றைய தினம் அதிர வைத்திருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழையில் விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. அன்று முதல் இன்றுவரை அவரது நினைவிடத்துக்கு பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் சென்று அஞ்சலி செலுத்தியபடியே உள்ளனர்..
அஞ்சலி: அந்த சமாதியில் நின்று பலரும் கதறி கதறி அழுதுவிட்டு செல்கிறார்கள்.. சிலர் அப்படியே பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மேலும் சிலர், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்துவிட்டு சென்று வருகிறார்கள். ஆனால், நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பும் கேட்டிருந்தார். பிறகு, சென்னை திரும்பிய விஷால் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.. அப்போது செய்தியாளர்கள் விஷாரிடம், நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவுக்கு சரியான அஞ்சலி செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்றீங்க என்று செய்தியாளர்கள் கேட்டிருந்தனர்.
மன்னிச்சிடு சாமி: அதற்கு விஷால், "எங்க விஜயகாந்த் அண்ணன் சாமி மறைவின்போது நான் ஊரில் இல்லாமல் போய் விட்டது என்னை ரொம்பவே வாட்டி வருகிறது. என்னை மன்னிச்சிடு சாமின்னு தான் அவர் சமாதியில் வேண்டிக் கொண்டேன்.. கேரளாவிலோ, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்திருந்தாலும் ஓடோடி வந்திருப்பேன். வெளிநாட்டில் சிக்கிக் கொண்டேன். உடனடியாக வர முடியாத சூழல்.
எனக்கே நான் சொல்லிக் கொண்டது என்னவென்றால் கையாளாகாதவன் ஆகிட்டியேடா என்று தான்... விஜயகாந்த் சாமி காலை தொட்டு கடைசியா ஒருமுறை கும்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லை..
விஜயகாந்த் அண்ணா: நடிகர் சங்க கட்டிடத்துக்கு கண்டிப்பா கேப்டன் விஜயகாந்த் பெயர் வைப்பது உறுதி.. அதிலுள்ள நிர்வாகிகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என யாருமே மாற்றுக்கருத்து இதற்கு சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு நடிகர் சங்கத்துக்கு பல விஷயங்களை செய்தவர் விஜயகாந்த் அண்ணா என்று உருக்கமாக பேசியிருந்தார் விஷால்.
இதற்கு பிறகு 4 நாட்களுக்கு முன்பு, பொங்கல் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவல்ல.. அந்த கோரிக்கை கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
எகிறும் எதிர்பார்ப்பு: அதேபோல, ஜனவரி 19ம் தேதி விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்றும் விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயகாந்தின் இரங்கல் கூட்டம் நடக்கிறது.. இதில் கலந்துகொள்ள நடிகர் நாசரும் அழைப்பு விடுத்திருக்கிறார்..
அறிவிப்பு வருமா: ஆனால், இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் வைக்கப்பட உள்ளதாக விஷால் கூறியிருப்பதால், அதுகுறித்த அறிவிப்பு ஏதாவது இன்று மாலை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications