பெரிய ஆளா நீ! வாடா பார்ப்போம்! கையில் இரும்பு கம்பியுடன் வாட்டாள் நாகராஜை விரட்டியடித்த விஜயகாந்த்
சென்னை: காவிரி பிரச்சினை தீவிரமடையும் போது ஷூட்டிங்கில் ரகளையில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜை விஜயகாந்த் தனியொருவராக இருந்து அவரை விரட்டியதாக பலர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
மதுரையைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவருடைய தந்தை ரைஸ் மில் ஓனர். இவர்களுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஆனாலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அவர் சினிமாவில் வாய்ப்புத் தேடினார். சென்னைக்கு வந்த அவர் தினமும் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு சென்று வாய்ப்பு தேடுவாராம்.

அப்போது உணவு இடைவேளை வந்தாலும் விஜயகாந்த் காத்திருப்பாராம். ஆனால் அங்கிருப்பவர்களோ விஜயகாந்தை சாப்பிட வாங்க என்று அழைக்காமலோ அல்லது சாப்பிட்டு வாங்க என சொல்லாமலும் சாப்பிடுவார்களாம். இதனால் விஜயகாந்த் பசியில் கடுமையாக அவதிப்படுவாராம்.
இந்த நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதற்காகத்தான் அவர் வீட்டுக்கு யார் சென்றாலும் உணவு கொடுக்காமல் விடமாட்டார். அத்துடன் பெரிய ஸ்டாராக மாறினாலும் அசால்ட்டாக நடந்து கொள்வார். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் பழகுவார். அப்படிப்பட்ட அவருடைய வீரமும் தைரியமும் எப்போதும் பேசப்படும்.
தமிழ் மீதும் இந்தியா மீதும் அதிக பற்றுக் கொண்டவர் விஜயகாந்த். ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதற்கு விஜயகாந்த்தான் முக்கிய காரணமாக இருந்தார். ஒரு முறை காவிரி பிரச்சினை தலைதூக்கியது. அந்த நேரம் பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே கொல்லேகால் பகுதியில் நடந்தது. அப்போது படக்குழுவினர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் வந்து கர்நாடகாவில் தமிழில் எழுதப்பட்ட கிளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என கடுமையாக பிரச்சினை செய்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் வாட்டாள் நாகராஜை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. அப்போதுதான் அந்த இடத்திற்கு விஜயகாந்த் வந்து பாரதிராஜாவிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். வாட்டாள் நாகராஜ் வந்து பிரச்சினை செய்தார்கள் என கூறியதும் விஜயகாந்துக்கு கடும் கோபம் வந்தது. காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு கோபமாக விஜயகாந்த் புறப்பட்டார். வாட்டாள் நாகராஜ், அவருடைய ஆட்கள் இருந்த இடத்திற்கு தனியாக போய் "வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா நீ... வாடா பார்த்துக்குவோம்" என்றாராம்.
விஜயகாந்த் கையில் இரும்புக் கம்பியுடன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கம்பீரமாகவும் கண்களில் கோபத்துடனும் இருந்ததை பார்த்த வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் தலைத்தெறிக்க ஓடினார்களாம். இதையடுத்து அந்த கிளாப் போர்டில் தமிழ் செல்வன் என்ற படத்தின் பெயரை போட வேண்டாம் என பாரதிராஜா சொன்னாராம். ஆனால் விஜயகாந்தோ படத்தின் பெயரை போடாவிட்டால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என விஜயகாந்த் கூறியதும் கிளாப் போர்டில் தமிழ்ச் செல்வன் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாம். இந்த தகவல்களை அந்த படத்தின் கதையாசிரியர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications