விஜயகாந்த் மகன் 4 மாதங்களுக்கு முன்பே சொன்னாரே.. செய்திகளால் மீடியாக்களிடம் கொந்தளித்த பிரேமலதா
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமான செய்தி தமிழ்நாடு மக்களையே சோகத்தில் மூழ்கடித்து உள்ள நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அவரது மகன் விஜய பிரபாகரன் விஜயகாந்தின் உடல் நிலை பின்னடைவு பற்றி கூறி இருந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியபடி இருந்தார். தெளிவாக பேச முடியாமல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அதன் பின்னர் வெளியில் கூட வர முடியாத நிலை இருந்தது. அவர் எப்படியாவது நல்ல உடல் நலத்துடன் மீண்டு வருவார் என அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்து அவர் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை கொரோனா தொற்றால் விஜயகாந்த் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி வந்தது. அடுத்த சில மணி நேரத்திலேயே விஜயகாந்த் உயிர் பிரிந்துவிட்டதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
இதற்கு 4 மாதங்களுக்கு முன்பே விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மதுரையில் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், "விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவாக உள்ளது. ஆனால், அவர் 100 ஆண்டுகள் வாழும் அளவு நன்றாக இருப்பார். முன்பு போல அவரை பேச வைக்கவும், எழுந்து வரவும் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். உங்களை போன்றே நாங்களும் அவர் நலமுடன் வருவார் என்று நம்பிக்கை வைத்து உள்ளோம்.
விஜயகாந்த் இன்று வரை நலமாகவே இருந்து வருகிறார். "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என்பதே விஜயகாந்தின் மந்திரம். எங்களின் தாரக மந்திரமாகவும் அதையே சொல்கிறோம். எனது கனவை ஓரம் கட்டிவிட்டு தொண்டர்களுக்காகவே ஓடி வந்து வேலை செய்து வருகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். விஜய பிரபாகரன் பேசிய மறுநொடி ஊடகங்கள் இதை செய்தியாக வெளியிட்டன. தமிழ்நாடு முழுவதும் இது தொடர்பாக பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில் விஜயபிரபாகரன் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் வெளியாகின. ஆனால், சில நாட்கள் கழித்து அவர் நலமுடன் வீடு திரும்பினார். தேமுதிக பொதுக்குழுவிலும் அவர் கலந்துகொண்டார். அதன் பின்னர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு என செய்தி வெளியிட்ட ஊடகங்களையும் பிரேமலதா கடிந்துகொண்டார். இந்த நிலையில் இன்று அவரது மரணம் பலரை கலங்க வைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications