விஜயலட்சுமி பலாத்காரம், கருக்கலைப்பு-மனைவி, மக்களுடன் நாளை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷன் போகும் சீமான்
சென்னை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தது, பல முறை கருக்கலைப்புக்குள்ளாக்கியது ஆகிய புகார்கள் தொடர்பான விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நாளை ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கடந்த முறை போல இந்த முறையும் மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையினர் உள்ளிட்ட ஆதரவாளர்களுடம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாளை சீமான் ஆஜராக கூடும் என கூறப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது ஏற்கனவே பல முறை புகார் கொடுத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் சீமானுடன் குடும்பம் நடத்தியதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பல முறை உறவு கொண்ட சீமான், கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார் என்பதும் விஜயலட்சுமியின் புகார்.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் சீமான் மீது போலீசார் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்; விஜயலட்சுமியே புகாரை திரும்பப் பெற்றுவிட்டார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையனோ, சீமானின் மனுவை டிஸ்மிஸ் செய்ததுடன், சீமான் மீதான புகார் தீவிரமானது; பலாத்கார புகார் என்பதால் போலீசாரே விசாரித்து12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் சென்று நடிகை விஜயலட்சுமியிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்ற போலீசார், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாளை பிப்ரவரி 27-ந் தேதி சீமான் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பினர். சீமானிடம் ஆண்மை பரிசோதனை, குரல் பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைகளுக்குப் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சீமான் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானால் அவர் கைது செய்யப்படுவார்; இத்தகைய பாலியல் பலாத்கார வழக்கில் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீமான் நாளை சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக அங்கு திரளக் கூடும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த முறை இதே விஜயலட்சுமி புகாரின் அடிப்படையிலான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சீமான் வரவழைக்கப்பட்டார். அப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்தும் நாம் தமிழர் கட்சியினர் வரவழைக்கப்பட்டனர். சீமான் மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையினரும் அப்போது கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications