"ஒன் டூ ஒன்.." நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்திய விஜய்! தவெகவில் வரும் மேஜர் மாற்றம்?
சென்னை: விஜய்யின் தவெக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி படமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இத்துடன் சினிமாவை விட்டு விலகி அரசியலில் விஜய் முழுமையாகக் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காகவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.
விஜய் அரசியல்:
இதற்காகக் கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் முதல் தவெக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர் பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதன் பிறகு அம்பேத்கர் புத்தக விழாவில் மட்டுமே பங்கேற்ற அவர், பிறகு பொதுக் கூட்டங்களில் பெரியளவில் பங்கேற்காமல் இருந்தார்.
மிகச் சமீபத்தில் தான் அவர் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்களை மட்டும் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் விஜய்யின் தவெக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு பெற்றவர்கள் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் நேரடியாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அதேபோல காலை 10 மணியளவில் விஜய் பனையூரில் உள்ள தவெக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
ஆலோசனைக் கூட்டம்:
தவெகவில் கட்சி நிர்வாகிகள் நியமனத்திற்குப் பணம் வசூலிக்கப்படுவதாக திடீரென புகார் எழுந்தது. ஏற்கனவே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பாகவும் இன்றைய தினம் மீண்டும் கட்சித் தலைமை சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிகிறது. மேலும், நகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நியமனம் தொடர்பாகவும் இதில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கூட இல்லாமல், ஒவ்வொரு நிர்வாகிகளையும் விஜய் நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வேங்கைவயல்:
இது தவிர வேங்கைவயல் விவகாரம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பரந்தூர் போராட்டக் குழுவைத் தொடர்ந்து விஜய் வேங்கைவயலுக்கு நேரடியாகச் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அது தொடர்பாகவும் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications