விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக இன்னொரு இமாலய சரித்திரம்.. முதல் முறையாக அதிக வாக்கு வித்தியாசம்!
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் வென்ற கட்சியே மீண்டும் வெல்வது இதுதான் முதல் முறை. அதுமட்டுமல்ல விக்கிரவாண்டி தொகுதி தேர்தல்களிலேயே முதல் முறையாக மிக மிக அதிகமான வித்தியாசத்தில்- சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சி என்ற இமாலய சரித்திரத்தையும் திமுக எழுதி இருக்கிறது.
1952-ல் சென்னை மாகாணத்தில் விக்கிரவாண்டி என ஒரு தொகுதி இருந்தது. அப்போது நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் கோவிந்தசாமி நாயகர், காங்கிரஸின் பாஷ்யம் ரெட்டியாரை தோற்கடித்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 1,850 வாக்குகள்தான். பின்னர் விக்கிரவாண்டி தொகுதி கைவிடப்பட்டு 2007-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் மீண்டும் உருவானது.

சிபிஎம் வெற்றி: புதியதாக உருவான விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இதுவரை மொத்தம் 5 தேர்தல்களை எதிர்கொண்டது. 2011-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் சிபிஎம் கட்சியின் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். திமுகவின் ராதாமணியை 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சிபிஎம் ராமமூர்த்தி.
பிரம்மாண்டமாக வென்ற அதிமுக: 2016-ம் ஆண்டு விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவின் ராதாமணி, அதிமுகவின் ஆர்.வேலுவை 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019-ல் ராதாமணி காலமான நிலையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வம், திமுகவின் புகழேந்தியை 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முதல் முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வென்றது.
2021-ல் திமுக வெற்றி: 2021-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் நா.புகழேந்தி, அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வத்தை 9,573 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். கடந்த சில மாதங்களுக்கு நா. புகழேந்தி காலமானதால் தற்போது விக்கிரவாண்டி தொகுதி 2-வது முறை இடைத்தேர்தலை சந்தித்தது.
இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா களம் கண்டனர். இத்தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் பங்கேற்காமல் புறக்கணித்தன. விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10-ந் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திமுக வெற்றி: மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் தொடங்கி 20-வது சுற்று வரை தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வென்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணியை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தி அபார வெற்றி பெற்றார் அன்னியூர் சிவா.
மிகப் பெரிய வாக்கு வித்தியாசம்: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் திமுக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் வென்ற கட்சியின் வேட்பாளர் மீண்டும் வெல்வதும் இதுதான் முதல் முறை. அதனைத் தொடர்ந்து இவ்வளவு மிகப் பெரிய வித்தியாசத்தில் ஒரு கட்சியின் வேட்பாளர் வெல்வதும் இதுதான் முதல் முறை. இந்த இமாலய சரித்திரத்தை திமுக எழுதி இருக்கிறது விக்கிரவாண்டி தொகுதியில்! இந்த வெற்றி சரித்திரத்தை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் முதல் தொண்டர்கள் வரை இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications