இருட்டுக் கடை அல்வா முதல் பார்டர் பரோட்டா வரை.. சென்னையில் உணவுத் திருவிழா! பீஃப் பிரியாணி நஹி!
சென்னை: சென்னையில் இன்று தொடங்கியுள்ள உணவுத் திருவிழாவானது வரும் 14-ஆம் தேதி இரவு வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இருட்டுக் கடை அல்வா முதல் குற்றாலம் பார்டர் பரோட்டா வரை அங்கு இல்லாத உணவுகளே இல்லை என்கிற வகையில் 200-க்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் யூ டியூபில் கலக்கிக் கொண்டிருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினரும், பொதுமக்கள் முன்னிலையில் சமைத்து அதனை இலவசமாக பரிமாற இருக்கின்றனர்.

உணவுத் திருவிழா
சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான உணவுத் திருவிழாவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை காண சென்னை மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒரே இடத்தில் இருட்டுக் கடை அல்வா முதல் குற்றாலம் பார்டர் பரோட்டா வரை, ஆம்பூர் பிரியாணி முதல் திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணி வரை கிடைப்பதால் அதனை ருசி பார்த்துவிட சென்னை மக்கள் தயாராகிவிட்டார்கள்.

பீஃப் பிரியாணி
திண்டுக்கல் உணவுத் திருவிழாவை போல் சென்னை உணவுத் திருவிழாவிலும் பீஃப் பிரியாணி ஸ்டால்கள் அமைக்கப்படவில்லை. இதற்கு காரணம் பீஃப் பிரியாணி ஸ்டால் அமைக்க யாரும் முன்வராததே காரணம் எனக் கூறுகிறார்கள் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். அதே நேரத்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி என ஏராளமான பிரியாணி வகைகள் இந்த உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருக்கின்றன.

உரிமம் பெறுவது
இது மட்டுமல்லாமல் ஹோட்டல் தொடங்குவதற்கான உரிமம் பெறுவது எப்படி, பதிவு செய்வது எப்படி என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவுத் திருவிழாவில் பாடம் எடுக்க உள்ளனர். இது ஹோட்டல் தொடங்க வேண்டும், ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன எனத் தெரியாமல் இருக்கும் பலருக்கும் பயன் அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இன்றைக் காட்டிலும் நாளையும், நாளை மறுதினமும் உணவுத் திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

வில்லேஜ் குக்கிங் சேனல்
சென்னை உணவுத் திருவிழாவின் ஹைலட்டாக உலகம் முழுவதும் யூடியூப் வீடியோக்களால் கலக்கிக் கொண்டிருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர், பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு பண்டங்களை சமைக்க இருக்கின்றனர். மொத்தத்தில் மனதுக்கு புத்துணர்வையும் வயிற்றுக்கு விருந்தையும் சென்னை உணவுத் திருவிழா கொடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications