சென்னையை நடுங்க வைத்த பயங்கரம்.. நடுநோட்டில் ஜாகீர் உசைனை குத்திப்போட்ட கும்பல்.. 3 பேருக்கு ஆயுள்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் முன்விரோதத்தால் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகரை சேர்ந்தவர் ஜாகீர் உசைன், இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் மாதர் ஷா தெருவில் தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென காரில் வந்த 4 பேர் ஜாகீர் உசேனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜாகீர் உசேனை மீட்ட அவரது நண்பர்கள் இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், ஜாகீர் உசைன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விருகம்பாக்கம் சின்மையா நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த், ரத்தின ராஜ்,முரளி, ரஞ்சித் ஆகிய 4 பேரை கைது விசாரணை நடத்தியது. இதில் ஜாகீர் உசைன், ஸ்ரீகாந்த், ரத்தினராஜ் ஆகியோருக்கு முன்பகை இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை 15 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புவனேஸ்வரி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரத்தினராஜ், முரளி, ரஞ்சித் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications