வேகமெடுக்கும் சிறப்பு டிஜிபி வழக்கு.. சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்யப்பட்ட.. விசாகா கமிட்டி அறிக்கை
சென்னை: விசாகா கமிட்டிக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த வழக்கில், கமிட்டி அறிக்கையை சீலிட்ட கவரில் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த உயர் அதிகாரி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு டிஜிபி
இந்த குழு விசாரணையை முடித்துக் கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. அதே போல வழக்குப் பதிவு செய்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கோரிக்கை
அந்த மனுவில், விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாகச் செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க வேண்டும் என்று கேட்டதில், ஜஜி அருணுக்கு பதிலாக ஜோஷி நிர்மல்குமார் நியமிக்கப்பட்ட போதும், சீமா அகர்வால் தொடர்ந்து கமிட்டியில் இருப்பதாகவும், சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை கூட கமிட்டி தனக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மீண்டும் விசாரணை
பெண் எஸ்.பி யை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனத் தெரிவித்த சஸ்பெண்ட செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, விசாகா கமிட்டியின் அறிக்கை கூட தனக்குத் தரப்படவில்லை எனவும், விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி மீண்டும் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

விசாகா கமிட்டி
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசைப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாகா கமிட்டியின் அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி சீலிடப்பட்ட கவரில் நீதிபதி முன்பு சமர்ப்பித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்..












Click it and Unblock the Notifications