வெய்ட் அண்ட் சீ.. இடைத்தேர்தலில் எப்படி ஜெயிக்கப்போறோம்னு பாருங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் நாங்கள் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணி, பாஜக, அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும், இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கட்சிகளின் முடிவு இனிமேல் தான் தெரியவரும். இந்நிலையில், இப்போதே மிகுந்த நம்பிக்கையோடு தேர்தல் முடிவு பற்றிப் பேசியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தேர்தல் பணிகள் தீவிரம்
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திமுக கூட்டணி, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் யார்
இதனிடையே அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதிமுக, தமாகா இடையே நடைபெற்ற ஆலோசனையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக, ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஜனவரி 23-ஆம் தேதி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளது.
தனித்தனியாகப் போட்டி
இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனித்தனியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னொரு பக்கம், பாஜகவும் தனித்துக் களமிறங்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக - பாஜக இடையே விரைவில் இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நின்றால் ஆளுங்கட்சி கூட்டணிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்ற நிலை இருக்கிறது. இதனை தவிர்க்க அதிமுக கூட்டணி என்ன மாதிரியான திட்டத்தைக் கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வாக்கு வித்தியாசம்
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கையில் இருந்தால்
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆதார் எண்ணுடன் மின்சார இணைப்பு அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும். ஏப்ரல் மாதம் வாட்ச்சுக்கான பில் தருகிறேன் என பாஜக தலைவர் கூறினார். கையில் பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே." எனக் கேள்வி எழுப்பினார்.