அதிகாரிகளே வெட்கப்படுங்கள், தியாகி பென்ஷன்- 99 வயது முதியவரை 23 வருசம் அலையவிட்டதால் கொதித்த நீதிபதி
சென்னை: தியாகிகள் பென்ஷன் கேட்ட 99 வயது முதியவரை 23 ஆண்டுகள் அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் குமார் கடுமையாக கண்டித்தார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்,. கடந்த 1997ம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தியாகிகள் பென்ஷன் வழங்கக்கோரி கபூர் மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் பரிந்துரையின்படி கபூரின் மனு மற்றும் ஆவணங்களை பரிசீலித்த பெரம்பூர் தாசில்தார் 2011ல் சென்னை கலெக்டருக்கு விளக்கமான கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தை பரிசீலித்த சென்னை மாவட்ட ஆட்சியர் 2015ல் தியாகி கபூரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார். 2015ம் ஆண்டு உரிய ஆவணங்களுடன் தியாகி ஆஜராகினார். எனினும், 23 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு பென்ஷனும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனக்கு பென்ஷன்
வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கபூர் சென்னை ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தனது இறுதி மூச்சுக்கு முன், சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கபூர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை,
நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். மனுதாரர் 99 வயதுடையவர் என்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஆகவே இந்த மனுவுக்கு நவம்பர் 6ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications