“Want Unity in Diversity, not uniformity”.. இந்தி திணிப்பை எதிர்த்த மாணவர்கள் - ஆடிப்போன நெறியாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தித் திணிப்பைப் பற்றி மாணவர்கள் நடத்திய உரையாடல் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக மாறி வருகிறது. தமிழ்நாடு தற்போது இரு மொழி கொள்கையைக் கடைப்பிடிப்பதே சரியானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோ பதிவின் முடிவில் ஒரு இளைஞர் பேசிய கருத்துதான் இப்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் அந்தக் கட்சியின் இந்தி எதிர்ப்பில் மிகத் தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்கும். அண்ணாதுரை 1967இல் ஆட்சிக்கு வந்த சில மாதங்கள் வரை தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைதான் நடைமுறையிலிருந்தது. திமுக ஆட்சி அமைந்தபின் அதை மாற்றுவதற்காக சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றது. இதுவே திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாகக் கடந்த 75 ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது.

Want Unity in Diversity Not Uniformity Students Raise Their Voices Against Hindi Imposition

இந்தப் போக்கை வலதுசாரி மனநிலை கொண்டவர்கள் மட்டுமல்ல; அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சில தலைவர்களே ஆதரிக்கவில்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சியிலிருந்த சில பெரிய தலைவர்கள் டெல்லி அரசியலுடனும் காந்தியுடன் நெருக்கமாகப் பல ஆண்டுகளாகத் தோழமை கொண்டிருந்தனர். காந்தி, இந்தியைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இயங்கிவந்தவர்.

அவரது தூண்டுதலால், 1930களிலேயே இந்தி தக்ஷிண பிரச்சார சபா தமிழ்நாட்டில் இயக்க ஆரம்பித்துவிட்டது. எனவே தனித்த ஆர்வத்தால் ஒருவர் இந்தியைக் கற்கத் தமிழ்நாட்டில் எந்தத் தடையும் திமுக கடைப்பிடிக்கவில்லை. யாரும்? எப்போதும் கற்க முடியும். ஆனால், அரசுப் பள்ளிகளில், அரசு அலுவலகங்களில் இந்தியை அனுமதிப்பது என்பது அது மாநில மொழியின் செல்வாக்கை அழித்துவிடும் என்பது திராவிட இயக்கங்களின் வாதம். அக்கருத்தை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.

திமுகவின் தலைமையில் இயக்கிய அனைவரும் தேசிய அரசியலில் ஈடுபாடு கொள்ளாதவர்கள். அவர்கள் ஒரு மாநிலக் கட்சியாகவே தங்களை முன்வைத்தனர். காங்கிரஸ் போன்ற பெரிய அமைப்பில் செயல்பட்டவர்கள் நிலை வேறு. அவர்கள் டெல்லியை மையமாக வைத்து அரசியலைச் செய்தவர்கள்.

ராஜாஜி, சத்தியமூர்த்தி, பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். செங்கல்பட்டு போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டத்திலிருந்து உருவான பக்தவத்சலத்திற்கு ஆங்கிலம், தமிழ், இந்தியைத் தவிர்த்து தெலுங்கும் சமஸ்கிருதமும் கற்றிருந்தார். அவருக்கு இந்தி ஒரு தடையாகத் தோன்றவில்லை. அவரைப்போலவே பலரும் பன்மொழிப் புலவராக இருக்கட்டுமே என அவர் மெத்தனமாக இந்த மொழி பிரச்சினையைக் கையாண்டார்.

ஆகவேதான், 1963இல் பக்தவத்சலம் முதல் அமைச்சரான பிற்பாடு, தமிழ்நாட்டில் 1965இல் இந்தி எதிர்ப்பு என்பது தீவிரம் அடைந்தது. 1938இல் இருந்தே இந்தி எதிர்ப்புக்குத் தமிழ்நாட்டில் வலுவான போராட்டம் தொடங்கியிருந்தாலும், அது 1965இல் மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக வெடித்தது. அந்த மாணவர்களின் எழுச்சியும் திமுக 1967ல் ஆட்சியைப் பிடிக்கக் காரணியாக அமைந்தது.

எனவே 1938 தொடங்கி இன்றைக்கு 2026 வரை கிட்டத்தட்ட 88 ஆண்டுகளாக இந்தி எதிர்ப்பில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இன்றைக்கு மொழி எல்லைகளைக் கடந்து தமிழ் மாணவர்கள் பல மொழிகளை வகுப்பறைகளிலேயே இரண்டாம் மொழிப்பாடமாக கற்கிறார்கள். அதில், ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகள் முன்னிலை வகிக்கின்றன.
அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென் இந்தியாவிலுள்ள மாணவர்கள் இந்தியை ஒரு மொழியாகக் கருதிப் படிக்க முன்வருவதில்லை.

காரணம், ஆங்கிலம் இந்த மாணவர்களுக்கு இந்தியைவிடப் பரந்த அளவில் பரிமாற்றம் செய்துகொள்ளக் கூடிய வாய்ப்பை அளித்துள்ளது. உலகளாவிய அடையாளத்திலிருந்து ஒரு உள்ளூர் மொழிக்கு அவர்களால் முக்கியத்துவம் தர முடியவில்லை. அல்லது தோன்றவில்லை.

இந்நிலையில்தான் 2026 தேர்தல் களத்தை படம்பிடித்துக் காட்ட வந்த வட இந்திய சேனலான என்.டி.டி.வி. கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு உரையாடலை நடத்தியிருந்தது. அதில் பங்கேற்ற இன்றைய தலைமுறை மாணவர்கள் பலரும் இந்தியை வேண்டாம் என வெறுக்கவில்லை. அதேசமயம் எங்களுக்குத் தேவை எனில் அப்போது கற்றுக் கொள்கிறோம் என்று பதிலளித்துள்ளனர்.

மூத்த ஊடகவியாளர் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய விவாதத்தில் பங்கேற்ற பல மாணவர்கள் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையே போதுமானதாக உள்ளது என்று கூறியுள்ளனர். அவர்கள் ஒருவேளை வேறு மாநிலங்களில் வேலை செய்ய வேண்டிய சூழல் உருவானால் அங்கு, ஆங்கிலத்தை வைத்துச் சமாளிப்போம், முடியாது என்ற பட்சத்தில் அப்போது மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தற்போது இரு மொழி கொள்கையைக் கடைப்பிடிப்பதே சரியானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோ பதிவின் முடிவில் ஒரு இளைஞர் பேசிய கருத்துதான் இப்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிவருகிறது.

குறிப்பாக திமுகவினர் இந்த மாணவர்களின் பேச்சை தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அந்த மாணவர் என்ன பேசினார்? அதுவும் அந்தத் தொலைக்காட்சி தொகுப்பாளரே ஆடிப்போகும் அளவுக்கு ஒரு வரியில் இந்தித் திணிப்பைச் சுட்டிக்காட்டினார். அவரது புத்திசாலித்தனமான வாதமே இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இவ்விவாதத்தில் பங்கேற்ற மாணவர், "Always want Unity in Diversity, not uniformity" என்றார். அதாவது நாங்கள் எப்போதும் ஒற்றுமையை வரவேற்கிறோம். பன்முகத்தன்மைகளை ஏற்கிறோம். ஆனால், அனைவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற சீருடை தன்மையைத்தான் எதிர்க்கிறோம்" என்றார்.

அதைத்தான் பல ஆண்டுகள் முன்பே "வேற்றுமையில் ஒற்றுமை" என்று அன்றைய தலைவர்கள் வலியுறுத்தினர். இன்றைக்கு அக்குரல் அப்படியே இளம் தலைமுறையின் குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் காணொளியைப் பகிர்ந்து கருத்திட்டு வரும் பலரும், இந்தியை வெறுக்கவில்லை என்றும் திணிப்பதையே வேண்டாம் என்கிறோம் என்றும் எழுதி வருகின்றனர். உண்மையில் இந்தத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் திமுகவுக்குக் கூடுதலாக ஒரு ஆயுதம் கையில் கிடைத்துள்ளது. அது இந்தக் காணொளிதான்.

- கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+