தமிழ்நாட்டில் 2 இடங்களில் போர் ஒத்திகை.. நாளை மாலை 4 மணிக்கு.. பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் ஆகிய 2 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மாலை 4 மணி முதல் 5 மணி நேரத்திற்கு ஒத்திகை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் ஒத்திகை, போர் தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே எனவும் போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாளை (ஏப்ரல் 7) நாடு முழுக்க உள்ள 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
போர் ஒத்திகை
இந்தியாவில் கடைசியாக கடந்த 1971ஆம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது. அதேபோல், நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற இருக்கிறது. மேலும், சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டும் ஒத்திகை நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவையும் நடக்கலாம் எனத் தெரிகிறது.
சென்னையில் 2 இடங்கள்
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தில் நாளை 4 மணிக்கு நடைபெற உள்ளது. எந்த அவசரகால சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது குறித்து இந்த பயிற்சியின் போது ஆய்வு செய்யப்படும்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் செயல்படும். இந்த போர் ஒத்திகையின் போது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பங்கு கொள்வார்கள். மாலை 4 மணி முதல் 4:30 மணி வரை இப்பயிற்சி நடக்க உள்ளது.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை
இந்தp பயிற்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலர், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர், டிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் திட்ட இயக்குநர், சென்னை துறைமுகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை." என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications