‘பதம்’ பார்க்கும் அண்ணாமலை.. “பாஜக மாநில தலைமை பேச்சை நாங்கள் மதிப்பதே இல்லை..” - செம்மலை சுளீர்!
சென்னை : "பாஜக மாநிலத் தலைவர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் மரியாதை கொடுப்பதில்லை. அவர் ஆலோசனை சொல்வதெல்லாம் அவர்களது தலைமையோடு வைத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்." என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே அண்ணாமலையின் கருத்துகளால் தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :

"அண்ணாமலை தேசியக் கட்சியின் மாநில தலைவர். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி என்பதால் தன்னை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைப்பது தவறு. பாஜக தேசியக் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் செல்வாக்கு என்று பார்த்தால் அதிமுக தான் பெரிய கட்சி. பாஜக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இருக்கும் என அண்ணாமலை பேசுகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும்.
அதிமுக மாநிலக் கட்சி என்றாலும், அதிமுக தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட காட்சி. அதிமுகவின் வாக்கு சதவீதம் திமுகவின் வாக்கு சதவீதத்தை விட அதிகம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 15 கட்சிகளை கூட்டணியில் சேர்த்து திமுக வென்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவுக்கான தேர்தல். அதில் நிச்சயமாக அதிமுக ஆட்சியை அமைக்கும். குழப்பம் ஏற்படுத்துவதற்காக வழக்குகள் தொடர்கிறார்கள். வழக்குகள் மூலம் அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார்கள். இந்த வழக்குகளால் அவர்கள் எதையும் சாதிக்க முடியாது.
மகாராஷ்டிராவில் என்ன நடந்தது? சிவசேனாவை முன்னிலைப்படுத்தி, அக்கட்சியைச் சார்ந்து தானே போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை சார்ந்து தான் தேர்தலில் நின்றார்கள். என்னதான் தேசியக் கட்சியின் கூட்டணியாக இருந்தாலும், 'முன்னேர்' என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிதான் தலைமை தாங்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும்.
எங்களை பதம் பார்க்க நினைக்கிறார்கள். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, தொகுதிப் பங்கீடு எல்லாமே அதிமுக தலைவரும், பாஜக தேசிய தலைமையுடன் தான் பேச்சுவார்த்தை எனச் சொல்லிவிட்டார். மாநிலத் தலைவர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் மரியாதை கொடுப்பதில்லை. அவர் ஆலோசனை சொல்வதெல்லாம் அவர்களது தலைமையோடு வைத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்.
தேசிய தலைமையின் சொல்படி நடக்க வேண்டியது தமிழ்நாடு பாஜகவினரின் கடமை. அதை மீறி மாநில பாஜக செயல்படாது என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஏதாவது திருகல் செய்தால் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படப்போவதில்லை. அவர்கள் ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்கா விட்டாலும் எங்களுக்கு கவலையில்லை."












Click it and Unblock the Notifications