திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் தேவையில்லை.. அதிமுகவுக்கு பதிலடி.. கொந்தளிக்கும் அமர் பிரசாத்!
பாஜக மாநில தலைவர் பதவி பற்றிய அதிமுக நிர்வாகியின் கருத்துக்கு அமர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார்.
சென்னை: பாஜக மாநில தலைவர் பொறுப்பு என்பது நாடு தழுவிய கிளை மேலாளர் பதவிக்கு நிகரானது என்ற அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு, அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அதில், தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல, எப்படி செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்று கூறிய அமர் பிரசாத், திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் தீவிரமாகி வருகிறது. தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார், அண்ணாமலையை குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் பாஜக நிர்வாகிகள்
தொடர்ந்து, பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்ற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் என ஏராளமான பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து ஏற்கெனவே விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இபிஎஸ்-க்கு எதிர்ப்பு
இதனால் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து தூத்துக்குடியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி தர்மத்தை மீறி எடப்பாடி பழனிசாமி மீறிய துரோகி என்று போஸ்டரும் வெளியிட்டனர். இதனால் தமிழ்நாடு பாஜக தலைமைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் பொங்கி எழுந்தால் பாஜகவினர் தாங்கமாட்டார்கள். எனவே, பாஜக மாநில தலைவர் அவர்களைக் கண்டித்து வைக்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
|
கோவை சத்யன் கண்டனம்
அதுமட்டுமல்லாமல், பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பு என்பது நாடு தழுவிய கார்ப்பரேட் நிறுவன கிளை மேலாளர் பதவிக்கு நிகரானது மட்டும் தான் என்று அதிமுக ஐடி விங் நிர்வாகி கோவை சத்யன் விமர்சித்துள்ளார். அதேபோல், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களுடன் மேலாளர்களை ஒப்பிட முடியாது. ஏனென்றால் அவர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பாஜக மாநில தலைவர் பொறுப்பு என்பது அப்படியானது அல்ல என்று கோவை சத்யன் விமர்சித்தார்.
|
அமர்பிரசாத் ரெட்டி பதிலடி
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். நேர்மைக்குச் சொந்தக்காரராகவும், பித்தலாட்டத்துக்கு துணை போகாதவராகவும் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications