ரபேல் ஆவணங்கள் நாளிதழில் வெளியானதில் தப்பில்லை.. அமெரிக்காவிலும் இப்படி நடந்திருக்கு.. ப.சிதம்பரம்
Recommended Video
சென்னை: ரபேல் விவகாரத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் நாளிதழில் வெளியானதில் தவறு கிடையாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
ராணுவ அமைச்சகத்திடம் இருந்த 36 ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட ஆவணங்களே மனுதாருக்கும், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட 'தி ஹிந்து' நாளிதழுக்கும் கிடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், தங்களுக்கு எப்படி தகவல் வெளியானது என்பது குறித்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான, ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில், இந்த விவகாரத்தில், நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தவறு இல்லை என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ரபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது.. மோடியை விசாரியுங்கள்.. ராகுல் பகீர் பேட்டி!
இதுபற்றி கூறியுள்ளதாவது: ரபேல் டீலிங் தொடர்பான ஆவணத்தோடு, செய்தி வெளியிடப்பட்ட விவகாரத்தில் நாங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம். இவை திருடப்பட்ட ஆவணம் என்ற வாதம், அரசியல் சாசனம் பிரிவு 19ன்கீழ் பறந்துபோய்விடும்.
1971ம் ஆண்டு, பென்டகன் பேப்பர்கள் தொடர்பாக, அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த வரவேற்புமிக்க தீர்ப்பு, ரகசிய பேப்பர்களை மீடியா வெளியிட முடியாது என்ற, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்திற்கு முழுமையாக, பதில் அளிப்பதாக இருக்கும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.