தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் கலைக்கப்படுகிறதா? சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு கூறியது என்ன
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகங்களைக் கலைக்கப் போவதில்லை எனவும், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தைக் கலைத்து புதிதாகத் தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெவ்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கடந்த 2018 ம் ஆண்டு நடந்த கூட்டுறவுச் சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடத் தமிழ்நாடு அரசுக்குத் தடை விதிக்கவேண்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமென அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களை திடீரென்று கலைக்கக் கூடாது எனவும், இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்கத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கூட்டுறவுச் சங்கங்கள் கலைக்கப்பட மாட்டாது என உறுதியளித்ததுடன், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.