ஒவ்வொரு மாவட்டத்திலும் கேப்டன் விஜயகாந்த்துக்கு சிலை வைக்க நடவடிக்கை.. சுதீஷ் கூறிய தகவல்!
சென்னை: தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த்திற்கு சிலை வைப்பதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்த உள்ளதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திலும், பின்னர் சென்னை தீவுத்திடலிலும் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்தும் வந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்பு 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அவரது குடும்பத்தினர் சடங்குகளைச் செய்தனர்.
பாசத்தில் அப்பாவை மிஞ்சும் பிள்ளைகள்.. விஜயகாந்த்தை 2 மகன்களும் எப்படி பார்த்துக்கிட்டாங்க தெரியுமா?
விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்தின் நினைவிடத்தில் நாள்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து அஞ்சலி செலுத்தலாம். விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசு நிச்சயம் செய்து தரும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், “விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க தேமுதிக சார்பில் வலியுறுத்தப்படும். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications