முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம்! - தஞ்சை மாணவி வழக்கில் கொக்கரிக்கும் ஏபிவிபி அமைப்பினர்!
சென்னை: அரியலூர் மாணவி மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிய ஏபிவிபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுதலை செய்யாவிட்டால், முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என ஏபிவிபி தெரிவித்துள்ளது.
அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மதம் மாறச்சொன்னதால் தான் மாணவி உயிரிழந்தார் என வீடியோ ஒன்று வெளியானதால், நாடு முழுவதும் பரபரப்பானது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு பாஜக பல போராட்டங்களை முன்னெடுத்தது.

மாணவி
தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் படித்த மாணவி தன்னை துன்புறுத்துவதாக பள்ளி நிர்வாகம் மீது புகாரளித்த வீடியோ வெளியானதில் இருந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய காவல்துறை இதை மதமாற்றம் இல்லை என்று சொன்னது. அதன்பிறகு, மாணவியின் வீடியோ பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

ஏபிவிபி
மாணவி வழக்கில் பாஜக ஆர்வம் காட்டியதுபோல், ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவ அமைப்பான ஏபிவிபி-யும் கையில் எடுத்தது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை பிப்ரவரி 28-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலை செய்ய வேண்டும்
இந்தநிலையில், சென்னையில் ஏபிவிபி மாநில நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ''தஞ்சாவூர் மாணவி மரணம் தொடர்பாக நீதிகேட்டு முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி விபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து முறையிடவுள்ளோம். தஞ்சை மாணவி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏபிவிபி குரல் கொடுக்கும்.

முற்றுகை
மாணவிக்காக போராடுகிறோம். இந்த விஷயத்தில் எந்த வித அரசியல் உள்நோக்கம் இல்லை. சென்னையில் போராட்டம் நடத்த பல இடங்களில் அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் அனுமதிக்கப்பட்ட மற்ற இடங்களில் போராட்டம் நடத்தினால் முதல்வருக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியான விடுதலை செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம்'' எனவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications