தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பாதுகாக்க நாங்க இருக்கோம்! உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழர் என்றாலே நமக்கெல்லாம் ஒரு உணர்வு வருகிறது. உள்ளூர் தமிழராக இருந்தாலும், வெளியூர் தமிழராக இருந்தாலும் சரி அந்த உணர்வை மாற்ற முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க குழுவை அமைத்தது.
அங்கு சென்று 2,000 தமிழ் மாணவர்களை மீட்டு வந்தோம். எங்கு இருந்தாலும் தமிழர்களை காப்பாற்றும் இயக்கம் திமுகதான்." என்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். குறிப்பாக மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது தவித்து உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். கர்நாடகா மற்றும் பஞ்சாபை சேர்ந்த 2 மாணவர்கள் ரஷ்யாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்பதற்காக சென்ற தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
இந்திய அரசும் ஆப்பரேசன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.இதனிடையே, உக்ரைனில் சிக்கி இருக்கும் தமிழ்நாடு மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழ்நாடு மாணவர்கள் உக்ரைனில் சிக்கி இருப்பதாவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மாணவர்களை வரவேற்ற முதலமைச்சர்
இதனை அடுத்து உக்ரைனிலிருந்து ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற தமிழக மாணவர்களும் பல்வேறு குழுக்களாக விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். நேற்று உக்ரைனிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழ்நாடு மாணவர்களின் கடைசி குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். அதன் பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை தொலைப்பேசியில் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக மாணவச்செல்வங்களை மீட்டு தாயகம் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாடு மாணவர்களை மீட்க திமுக அரசு தனியாக குழுவை அமைத்து, உதவி எண்களை அறிவித்து தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்ததுடன் மத்திய அரசுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மாநில அரசை குறிப்பிடாமல் மத்திய அரசை மட்டும் வாழ்த்தி இருந்தார். இந்த நிலையில்தான், தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வாறு பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications