“நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! அத்தனை தடைகளையும் உடைப்போம்”.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
சென்னை: "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்! கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்! அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சான்றிதழ்களை வழங்கினார். இவர்களில் 86 ஆண்கள், 11 பெண்கள் என 97 பேர் அர்ச்சகர்கள் பயிற்சியும், 9 பேர் ஓதுவார் பயிற்சியும், 9 தவில், நாதஸ்வரம் பயிற்சி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

இதுபற்றிய செய்தியை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம் கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம். பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம்! பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970 ஆம் ஆண்டு அனைவரும் கோயில் கருவறைக்குள் செல்லும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் விரைவில் இயற்றப்படும். எனவே போராட்டம் வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பெரியார் போராட்டத்தைக் கைவிட்டார். அனைவரும் அர்ச்சகராகும் வகையில் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவுகளில் திருத்தம் செய்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது.
2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசாணை பிறப்பித்து, இதற்கான சட்டத்தையும் இயற்றினார். இதையடுத்து, சென்னை, ஸ்ரீரங்கத்தில் வைணவ அர்ச்சகர்களுக்கும் மதுரை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூரில் சைவ அர்ச்சகர்களுக்கும் என 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. 240 பேருக்கு 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பயிற்சி தொடங்கப்பட்டது.
பல்வேறு வழக்குகள் காரணமாக பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. கடந்த 2021 ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications