விக்கிரவாண்டி: நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம்? சீமான் பரபர பதில்.. அதிமுகவை இப்படி சொல்லிட்டாரே
சென்னை: மைக் சின்னத்தில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்த சீமான், இனிமேல் கரும்பு விவசாயி சின்னத்தில் நாங்கள் போட்டியிடமாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியில்லை என்பது வேடிக்கையானது என்றும் அவர் கூறினார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இந்த தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளராக சி. அன்புமணி போட்டியிட உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
இதனால், விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றது. இதனால், மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற உள்ளது. மைக் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் சீமான் கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து இருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
எனினும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், மைக் சின்னத்தில்தான் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியில்லை என்பது வேடிக்கையானது என்றும் கூறினார். இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது:-
இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. அவ்வளவு விதிமீறல்கள் அரங்கேறுகின்றன. எனவே, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சொல்லும் காரணங்களில் நான் உடன்படுகிறேன். அதேவேளையில், அதிமுக ஆளும் ஆட்சியாக இருந்த போது நடந்த இடைத்தேர்தல்களில் நடந்த முறைகேடுகளை மக்கள் மறக்கவில்லை.
எனவே தான், இந்த தேர்தலை புறக்கணிப்போம் என்று அதிமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிடும். மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தபிறகு நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில்தான் போட்டியிட முடிவு செய்து இருக்கிறோம். இந்த தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சிக்கு என தனி சின்னத்தை கேட்போம்.
புலி சின்னத்தைதான் முதலில் கேட்போம். இந்த சின்னத்தை ஏற்கனவே எங்களுக்கு தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. புலி சின்னம் கிடைக்காவிட்டால் விவசாயி சின்னம் கேட்போம். ஆனால் முன்பு வைத்து இருந்த கரும்பு விவசாயி சின்னம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications