மீண்டும் நீதிமன்றப் படியேறுவோம்.. பொதுக்குழு செல்லவே செல்லாது - கறாராகச் சொல்லும் வைத்திலிங்கம்!
சென்னை : சட்ட விதிகளை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உச்சநீதிமன்றத்திலும், இன்று காலை உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் சென்னை உயர்நீதிமன்றம் எப்படி தீர்ப்பளிக்கிறதோ அதை மதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
என்னை ஓரம் கட்ட முடியாது.. 5 ஆண்டுகளுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர்.. ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் உட்கட்சி பிரச்சனையில் தலையிட முடியாது எனத் தெரிவித்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இரண்டு வழக்குகளின் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துள்ளன. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி நடத்துவதற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
ஒபிஎஸ் ஆலோசனை
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின்போது நீதிமன்ற உத்தரவுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பொதுக்குழு செல்லாது
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க வைத்திலிங்கம், நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம். இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். சட்ட விதிகளின்படி ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செயற்குழு கூட்டம் செல்லாது. மீறி பொதுக்குழு நடத்தப்பட்டால் அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானங்களும் செல்லாது எனத் தெரிவித்தார்.
தீர்ப்பை பொறுப்பு
மேலும், சட்ட விதிகளை மீறி செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கும் செல்வோம். தற்போது உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து எங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை தெரிவிப்போம் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.