அடமழை வெளுக்கப் போகுது.. இரவு முதல் நாளை காலை வரை.. சென்னை மக்களே தயாராக இருங்கள்.. பிரதீப் ஜான்!
சென்னை: இன்று இரவு முதல் காலை வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக பிரபல தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகர்வதால், இன்று இரவு மற்றும் நாளை காலை மயிலாடுதுறை முதல் சென்னை வரை பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பின் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தீபாவளி தினமான நேற்று மாலை சில பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மாலையில் சற்று மழை குறைந்த நிலையில், தற்போது தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பிரதீப் ஜான், சென்னை மக்களே அடுத்தக் கட்ட மழைக்கு தயாராகுங்கள்.. இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்வதால், இன்று இரவு முதல் நாளை காலை வரை மயிலாடுதுறை முதல் சென்னை வரை பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை 100 மிமி வரை மழை பெய்திருக்கும் என்று கூறி இருக்கிறார். அதேபோல் நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் இரவு முதல் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications