ஆஹா.. "கலைஞர் உணவகம்".. செல்லூர்ராஜு என்ன இப்படி சொல்லிட்டாரே.. என்னவா இருக்கும்.. விழிக்கும் அதிமுக
கலைஞர் உணவகங்களை வரவேற்பதாக செல்லூர ராஜு பேட்டி தந்துள்ளார்
சென்னை கலைஞர் உணவகங்கள் கொண்டுவரப்படுவதை வரவேற்கிறோம் என்று மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.. இதுதான் இப்போதைய ஹாட் டாப்பிக்காக அதிமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் பசியை ஆற்றுவதற்காக, கடந்த 2013ம் ஆண்டு அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன... மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய சீரிய திட்டம் இது.. மக்களிடம் வெகு சீக்கிரத்திலேயே நன்மதிப்பையும் இந்த அம்மா உணவகங்கள் பெற்றன.
இப்போதைக்கு 700 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன... ஆனால், திமுக அரசு அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகிறது..

போர்டு
இப்படித்தான், திமுக ஆட்சிக்கு வந்த 2வது நாளே, அம்மா உணவகம் போர்டை திமுகவினர் சிலர் சேதப்படுத்தியபோது அவர்கள் மீது, முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவும், உடனடியாகவும் நடவடிக்கை எடுத்தார்.. அதுமட்டுமல்ல, அம்மா உணவகம் என்ற பெயரிலேயே உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். ஆனாலும் அதிமுகவுக்கு ஒருவித சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

திடீர் ஆய்வு
3 மாதத்துக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ஒரு அம்மா உணவகத்தின் கிச்சனுக்குள் நுழைந்து திடீரென ஆய்வு செய்தார்.. அங்குள்ள ஊழியர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.. அதேபோல, கடந்த வாரமும் முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகத்தினுள் நுழைந்து ஆய்வு நடத்தினார்.. இவ்வளவு நடந்தும் அம்மா உணவகத்தை திமுக அரசு ஏதாவது காரணம் சொல்லி நிறுத்திவிடுமோ என்ற சந்தேகம் அதிமுக தரப்புக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

வரவேற்பு
இப்படிப்பட்ட சூழலில்தான் அம்மா உணவகத்துடன் சேர்த்து கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி நேற்றைய தினம் அறிவித்தார்.. அமைச்சர் இப்படி சொன்னதுமே, அதிமுகவுக்கு மேலும் கலக்கம் சூழ்ந்து கொண்டது.. கலைஞர் உணவகம் என்பது திமுகவின் வாக்குறுதிகளில் ஏற்கனவே தரப்பட்ட ஒன்றுதான் என்பதால் இதனை திமுக வரவேற்று வருகிறது.. ஆனால், அதிமுகவோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வரவேற்பு
அதிலும் ஓபிஎஸ்தான் முதலில் இதுகுறித்த பேச்சை ஆரம்பித்து வைத்துள்ளார்.. அம்மா உணவக திட்டத்தை இருட்டடிப்பு செய்யவே கலைஞர் உணவகம் கொண்டுவரப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தார்... இந்நிலையில்தான் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

கலைஞர் உணவகம்
அதில், "கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.. கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்.. வாழ்த்துகிறோம்... ஆனால், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்.. நகர்புற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும், அதிமுகவை வெல்ல தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தியும் இல்லை... அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவொரு சலசலப்பும் நடக்கவில்லை... அமைதியான முறையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அண்ணாமலை
2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை சொல்லி இருப்பது அவரது ஆசை, விருப்பம்... ஒருவரின் ஆசையை நாம் நிராகரிக்க முடியுமா..? ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெறும் என்பதற்கு சான்று இது... பாஜக ஒரு வளர்கின்ற கட்சி, பாஜகவினர் தங்கள் கட்சி வளர எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வார்கள் என்றார்.

சலசலப்பு
செல்லூர் ராஜூவின் இந்த பேச்சுதான் தற்போதைக்கு வைரலாகி வருகிறது.. கலைஞர் உணவகம் வேண்டாம் என்று செல்லூர் ராஜூ சொல்லவில்லை, அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.. ஆனால் அம்மா உணவகங்களை மறைத்துவிட வேண்டாம் என்றே கோரிக்கை விடுத்துள்ளார்.. ஒருபக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கலைஞர் உணவகத்தை எதிர்க்கும் சூழலில் அதே கட்சியின் முன்னாள் அமைச்சர், கலைஞர் உணவகத்தை வரவேற்றிருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது... என்னவா இருக்கும்?












Click it and Unblock the Notifications