பேச முடியாத செந்தில் பாலாஜி..கண் திறக்கவில்லை..மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர்..கே.என்.நேரு
சென்னை: செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை என்றும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அனுமதி பெற்று சந்தித்ததாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பணியமர்த்திய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுயநினைவு இன்றி உள்ளார். காது பக்கத்தில் வீக்கம் இருந்தது .தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எடுக்கப்பட்ட ஈசிஜியில் வேரியேஷன் காட்டுவதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். அவர் துன்புறுத்தப்பட்டதற்கு இவைகள் எல்லாம் அடையாளமாக காணப்படுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சொல்லி அழைத்தபோதும் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார் என்றும் கூறினார். செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் பலரும் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இதனையடுத்து அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, அமலாக்கத்துறை அதிகாரிகளின் அனுமதியோடு சந்தித்ததாக கூறினார். செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். அவரது உடல் நிலை மோசமாக இருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications