10 அதிரி புதிரி கிளைமேக்ஸ்கள்.. இது மட்டும் நடந்தால்.. அவ்வளவுதான்.. அதிமுக மொத்தமாக மாறும் - பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 30ம் தேதி இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணை முடியும்பட்சத்தில் இந்த வருட இறுதிக்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம்.
பல திருப்பங்களுடன் அதிமுக பொதுக்குழு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக வரலாற்றில் கட்சி தொடர்பாக இப்படி நீண்ட வழக்கு நடந்ததே இல்லை. ஜெயலலிதா - ஜானகி மோதலின் போது கூட இவ்வளவு பெரிய நீண்ட வழக்கு அதிமுகவில் நடந்ததே இல்லை.
அதிமுக பொதுக்குழு வழக்கில் முதலில் தனி நீதிபதி அமர்வு பொதுக்குழுவை நடத்த அனுமதி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து இரவோடு இரவாக நடந்த விசாரணையில் பொதுக்குழுவை நடத்தலாம் ஆனால், ஓ பன்னீர்செல்வம் அனுமதிக்காத மசோதாவை நிறைவேற்ற கூடாது என்று ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆட்டம் காட்டும் அமித் ஷா.. தூண்டிலில் சிக்கும் அதிமுக மீன்கள்.. 4 பேராமே.. திரும்பி பார்த்த எடப்பாடி
அதிமுக வழக்கு
அதன்பின் இரண்டாவதாக ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது. இந்த இரண்டாவது பொதுக்குழுவை நடத்துவதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பொதுக்குழு நடத்தப்பட்டு ஜூலை 11ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. அதே சமயம் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றார். இதையடுத்து உயர் நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்து வந்த பாதை
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நீதிபதி மாற்றப்பட்டு, கடைசியில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்டது தவறு. பொதுக்குழு சட்ட விதிகளை மீறி கூட்டப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவில் விதிகள் மதிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பொதுக்குழு செல்லாது
இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார். இந்த பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். தற்போது வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இரண்டு மாதங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அதிமுகவில் நாங்கள் மெஜாரிட்டி பற்றி ஆராய போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்பது எங்கள் கவலை இல்லை. பொதுக்குழு எப்படி கூடியது என்பதே எங்கள் கவலை.
சட்டப்படி கூட்டம்
பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை வழக்கில் ஆராய போகிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். அதாவது மெஜாரிட்டி பற்றி கவலைப்பட போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போதைய நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது. கட்சியில் மாற்றம் எதையும் செய்ய கூடாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இனி விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.
எடப்பாடி ஆதரவு தீர்ப்பு
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் பின்வரும் விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
கிளைமேக்ஸ் 1 - அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில் கட்சி அவரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் செல்லும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது செல்லும்.
கிளைமேக்ஸ் 2- அதிமுகவில் அவர் எடுத்த முடிவுகளும் செல்லுபடியாகும். அதாவது அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது, அவரின் ஆதரவாளர்களை நீக்கியது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செல்லுபடியாகும்.
கிளைமேக்ஸ் 3 - எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் உடனே பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரபூர்வமாக அவர் தொண்டர்கள் மூலம் பொதுச்செயலாளர் ஆகலாம்.
கிளைமேக்ஸ் 4 - எடப்பாடி ஒற்றை தலைவர் ஆகும் பட்சத்தில் கட்சி கூட்டணி முடிவுகள் எல்லாம் மாறும்.
கிளைமேக்ஸ் 5 - எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி உதயகுமார் பதவி ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகும்.
ஓ பன்னீர்செல்வம் ஆதரவு தீர்ப்பு
ஒருவேளை இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறும் பட்சத்தில் பின் வரும் விஷயங்கள் நடக்கும்.
கிளைமேக்ஸ் 6 - ஓ பன்னீர்செல்வம் வெல்லும் பட்சத்தில், அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று கூறப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் எடப்பாடி எடுத்த முடிவுகள் எதுவும் செல்லாது. அவர் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டதும் செல்லாது.
கிளைமேக்ஸ் 7 - அவர் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை நீக்கியதும் செல்லாது என்று அறிவிக்கப்படும்.
கிளைமேக்ஸ் 8 - அதிமுகவில் ஜூலை 11ம் தேதிக்கு முன்பு இருந்த நிலை தொடரும் என்று அறிவிக்கப்படும்.
கிளைமேக்ஸ் 9 - அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் பவர் அதிகரிக்கும். நிர்வாகிகள் மீண்டும் அவர் பக்கம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் சிலர் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கும்.
கிளைமேக்ஸ் 10 - எடப்பாடிக்கு இருக்கும் பலம் வெகுவாக குறையும் வாய்ப்புகளும் உள்ளன. முக்கியமாக தென் மண்டலத்தில் எடப்பாடி பலம் மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறும் பட்சத்தில் அது டிடிவி தினகரன் - சசிகலாவின் எழுச்சியாகவும் பார்க்கப்படுகிறது. இவர்கள் மீண்டும் கரம் கோர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும்.