சீக்ரெட்டாக நமது சேமிப்பில் கை வைக்கும் வங்கிகள்.. அட இவ்வளவு கட்டணங்கள் இருக்கா.! மிரண்டு போவீங்க
சென்னை: உங்கள் வங்கிக் கணக்கை எடுத்துப் பார்த்தால் அந்த கட்டணம், இதற்கு அபராதம் என்றே ஆண்டுக்குக் கணிசமான தொகையை நீங்கள் இழக்க நேரிடும். வங்கிகள் உண்மையில் இதுபோல எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது.. இதை ஈஸியாக தவிர்ப்பது எப்படி என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி கட்டமைப்பு அனைவரிடமும் சென்று சேராமல் இருந்தது. பலரும் வங்கி கட்டமைப்பில் இருந்தே வெளியே இருந்தனர். ஆனால், யுபிஐ வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. யுபிஐ சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிறு குறு வணிகர்களும் கூட வங்கிக் கணக்கைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வங்கிகள்
இதன் காரணமாகவே இந்தியாவில் வங்கிகள் சேவை பெரியளவில் அதிகரித்தது. இந்தியாவில் இப்போது பல்வேறு வங்கிகள் உள்ள நிலையில், அவை பல வகைகளில் சேவை கட்டணத்தை வசூலிக்கிறது. பல நேரங்களில் நமக்கே தெரியாமல் கணிசமான தொகையை நாம் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கட்டணங்கள் மற்றும் அபராதங்களுக்குச் செலுத்த வேண்டி இருக்கிறது. வங்கிகளில் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க இவை என்ன மாதிரியான கட்டணங்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராக இருந்தாலும் சரி அல்லது நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நபராக இருந்தாலும் சரி, வங்கிகள் குறிப்பிட்ட சில கட்டணத்தை உங்களிடம் வசூலிக்கும். அதில் சில பொதுவான கட்டணங்களை நாம் பார்க்கலாம்.
இதுதான் முக்கியம்
மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காமல் போவதால் தான் நம்மில் பெரும்பாலானோர் பெரும் தொகையை இழக்கிறோம். உங்களிடம் சேமிப்பு கணக்கு இருக்கிறது என்றால் அதில் நீங்கள் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்க வேண்டும். எந்த வங்கி, எந்த ஊரில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த குறைந்தபட்ச தொகை நிர்ணயம் செய்யப்படும். அதைப் பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். ஒரு சில வங்கிக் கணக்குகளைத் தவிர பெரும்பாலான வங்கிக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டும்.
அதேபோல நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போதும் தனியாக உங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். மாதத்திற்கு சில முறை நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம். ஆனால், அதன் பிறகு கட்டணம் எடுக்கும்போது தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
மக்களே கவனம்
செக் பவுன்ஸ் கட்டணம்: நீங்கள் ஒருவருக்கு செக் போட்டு தருகிறீர்கள்.. அவர்கள் அந்த செக்கை வங்கியில் செலுத்தும்போது அந்த தொகை உங்கள் வங்கியில் இல்லை என்றால் உங்கள் செக் பவுன்ஸ் ஆகிவிடும். இதுபோல புவன்ஸ் ஆகும் செக்கிற்கு ரூ.250 முதல் ரூ.500 வரை அபராதம் இருக்கும்.
புதிய செக் புக்கிற்கான கட்டணம்: நீங்கள் புதிதாகக் கணக்கு தொடங்கும்போது உங்களுக்கு செக் புக் இலவசமாக வழங்கப்படும். ஆனால், அந்த செக் புக்கை நீங்கள் பயன்படுத்திவிட்டால் புதிய செக் புக் வாங்க 25 பக்கங்களைக் கொண்ட செக் புக்கிற்கு கட்டணமாக சுமார் ரூ.100- ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது.
கடன் வாங்கவும் தனிக் கட்டணம்
நிதி பரிமாற்ற கட்டணம்: NEFT & RTGS மூலம் பணம் அனுப்பும்போது அதற்கும் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். NEFT மூலம் அனுப்பும்போது ரூ.10,000 வரை என்றால் 2.25 ரூபாயும், ரூ.200,000க்கு மேல் என்றால் 24.75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், நீங்கள் வங்கியில் லோன் எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பிராசஸிங் கட்டணம் ன்பது நீங்கள் பெரும் மொத்த கடனில் 0.5 முதல் 2 சதவீதம் வரை இருக்கும்.
பராமரிப்பு கட்டணம்: நீங்கள் எல்லாவற்றையும் சரியாகப் பின்பற்றினாலும் கூட ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். உங்கள் வங்கி மற்றும் என்ன மாதிரியான கணக்கு என்பதைப் பொறுத்து ரூ.150 முதல் ரூ.1,500 வரை இந்த கட்டணம் இருக்கும்.
இதுதான் அதிகம்
ஓவர் டிராஃப்ட் கட்டணங்கள்: உங்கள் வங்கிக் கணக்கின் பேலன்ஸ் பூஜ்ஜியத்திற்கு கீழ் போனால் ஓவர் டிராஃப்ட் கட்டணம் வசூலிக்கப்படும். இவை தான் அதிகபட்ச கட்டணங்கள் ஆக இருக்கும். ஒவ்வொரு முறையும் சுமார் ரூ.400 முதல் ரூ.800 வரை ஓவர் டிராஃப்ட் கட்டணம் வசூலிக்கப்படும். இதுபோல சில சிறப்புக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடுதல் சேவை கட்டணங்களாக ரூ.50 முதல் ரூ.250 வரை வசூலிக்கப்படும்.
IMPS சார்ஜ்: இந்தியாவுக்குள் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு எளிதாகப் பணம் அனுப்பப் பயன்படும் மற்றொரு முறை தான் இந்த IMPS. ஆனால் இதற்கான கட்டணங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கட்டண அமைப்பு மாறுபடும். சில வங்கிகள் சிறியளவிலான கட்டணங்களை வசூலிக்கும். அதேநேரம் மற்ற வங்கிகள் கணிசமான தொகையை வசூலிக்கின்றன.
என்ன செய்தால் கட்டணங்களைக் குறைக்கலாம்:
குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்கவும். பெரும்பாலும் நமது வங்கிக் கணக்கில் இருந்து இந்த சார்ஜ் அதிகம் பிடித்தம் செய்யப்படும். எனவே, குறைந்தபட்ச பராமரிப்பு தொகையைச் சரியாகப் பராமரிக்கவும். மேலும், முடிந்த வரை இன்-நெட்வொர்க் ஏடிஎம்களைப் பயன்படுத்தவும். அதாவது எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ.. அதே வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தவும். மேலும் சிறு சிறு தொகைக்காக பணம் எடுப்பதைத் தவிர்க்கவும். 4 முறை ஏடிஎம்களை பயன்படுத்தக் கட்டணம் இல்லை. எனவே, அதற்கேற்ப ஒரு வாரத்திற்குத் தேவையான பணத்தை எடுத்து வையுங்கள்.
நாம் பெரும்பாலும் கோட்டைவிடுவது இங்கே தான். அதாவது ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கை செக் செய்யுங்கள். தேவையில்லாமல் எதாவது கட்டணம் கழிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்க்க சில நிமிடங்கள் செலவு செய்யுங்கள். இதைச் செய்தால்தான் என்ன பிரச்சினை என்பதை முதலில் கண்டுபிடிக்க முடியும்.
ஸ்மார்ட்டாக யோசியுங்கள்
பல வங்கிகளில் நீங்கள் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தும்போது கட்டணம் இருக்காது. எனவே, வங்கிக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்த்து ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தவும். வங்கிக்கு செல்லும்போது ஏற்படும் நேர தாமதம், கூட்டத்தைத் தவிர்ப்பது மட்டுமின்றி கூடுதல் கட்டணத்தையும் தவிர்க்கலாம்.
மேலும், ஓவர் டிராஃப்ட் ஆகும்போது தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, வங்கிக் கணக்கு ஜீரோவுக்கு கீழ் செல்லவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் தேவையற்ற பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.. அதிகப்படியான பரிவர்த்தனைகள் செய்யும்போது கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அதையும் கவனமாகத் தவிர்க்கவும்.












Click it and Unblock the Notifications