"மெரினா மாடல்" புரட்சி.. ராஜபக்சே குடும்பத்தை உலுக்கிய இளைஞர்களின் போராட்டம்.. இத்தனை ஒற்றுமைகளா?
சென்னை: சென்னையில் நடைபெற்ற மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் கொழும்புவில் இலங்கை அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கும் இடையில் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உள்ளன.
Recommended Video
இவங்க எல்லாம் சின்ன பசங்க.. இளைஞர்கள்.. ஒன்னா சேர்ந்து கோஷம் போட்டா என்ன மாறிடும்.. வேலை இல்லாம இப்படி பண்ணிட்டு இருக்காங்க.. மெரினாவில் இளைஞர்கள் இணைந்து ஜல்லிக்கட்டிற்காக போராடிய போது பலர் கூறிய விமர்சனங்கள் இவை. இலங்கையில் galle பீச்சிற்கு வெளியில் இளைஞர்கள் அரசுக்கு எதிராக கூடிய போதும் இதே விமர்சனம்தான் வைக்கப்பட்டது.
இப்படி சின்ன பசங்க எல்லாம் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்துவிட முடியுமா? ராஜபக்சே குடும்பம் எவ்வளவு பெரியது தெரியுமா? என்று கருத்துக்கள் சொல்லப்பட்டன. ஆனால் அந்த இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தால் மஹிந்த ராஜபக்சே தற்போது பிரதமர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு.. கொழும்பு போராட்டத்திற்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.

எங்கு நடந்தது?
மெரினா போராட்டத்தை போலவேதான் இந்த போராட்டமும் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இலங்கையில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே galle பீச் இருக்கிறது. இங்குதான் போராட்டம் நடைபெற்றது. தினமும் பல்லாயிரம் பேர் வரிசையாக வந்து போராட்டம் செய்தனர். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள். இளைஞர்கள், இளைஞிகள்தான் போராட்டம் செய்தனர். மெரினாவில் காணப்பட்டது போன்ற அதே கூட்டம்தான் இங்கு இருந்தது.

தலைவர் இல்லை
மெரினா போராட்டம் போல இதற்கும் தலைவர்கள் இல்லை. பல்வேறு இளைஞர்களால் கூட்டம் கூட்டமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தலைவர் என்று தனியாக யாரும் இல்லை. இதனால் மெரினா போராட்டம் போல இதில் தனித்த தலைவர்கள் உருவாகவில்லை. இதன் காரணமாக எந்த விதத்திலும் தனியாக தலைவர்களை இலங்கை அரசால் மிரட்டவும் முடியவில்லை. மெரினா போராட்டம் போலவே பல உள்ளூர் பிரபலங்கள் இந்த போராட்டத்தில் அவ்வப்போது பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை
அதேபோல் அரசியல் கட்சிகளுக்கு அங்கு இளைஞர்கள் இடம் கொடுக்கவில்லை. இளைஞர்கள் தனியாக போராட்டம் செய்தனர். அதில் எதிர்க்கட்சிகள் நுழைந்தால் இது மக்கள் போராட்டமாக நீடிக்காது. அதன் காரணமாக மக்கள் யாரும் எதிர்கட்சிகளை அனுமதிக்கவில்லை. மெரினா போராட்டத்திலும் இதுதான் நடந்தது. இந்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச முயற்சிகள் நடந்தன. ஆனால் அது கடைசி வரை நடக்கவே இல்லை.

ஜாலியான போராட்டம்
மெரினா போராட்டம் போலவே சீரியசான போராட்டத்திற்கு இடையில் இங்கு ஜாலியான அம்சங்களும் இடம்பெற்ற. கோட்ட கோ பய.. கோட்டாக்கே ஐய கோப பய போன்ற பாடல்கள் உருவாக்கப்பட்டு இந்த பீச்சில் பாடப்பட்டது. மெரினாவில் நாட்டுப்புற கலைஞர்கள் பலர் வந்து பாடிவிட்டு சென்றனர். திருவிழா போல மொபைல் வெளிச்சம் எல்லாம் வைக்கப்பட்டு போராட்டம் நடந்தது. அதேபோல்தான் இங்கு இரவு பகல் பாராது பாடல் பாடி, நடனம் ஆடி போராட்டம் செய்தனர்.

போராட்டத்தில் ஒழுங்கு
ஜாலியாக மக்கள் கொண்டாட்டமாக போராட்டத்தை செய்தனர். ஜாலியான போராட்டம் என்றாலும் போராட்டத்திலும் ஒரு ஒழுங்கு இருந்தது. மக்கள் ஒற்றுமையாக போராடினார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் இது என்ற தெளிவு இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இந்த ஒழுங்கு இருந்தது. இரண்டு போராட்டத்திலும் பெண்கள் மீதான சீண்டல், திருட்டு போன்ற புகார்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

சோஷியல் மீடியா
அதேபோல் சோஷியல் மீடியாவை இரண்டு போராட்டமும் நன்றாக பயன்படுத்திக்கொண்டது. கடந்த மாதம்தான் இலங்கையிலேயே அதிக போஸ்டுகள், டிரெண்டுகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அந்த அளவிற்கு இந்த போராட்டம் அங்கு புதிய டிரெண்டை உருவாக்கியது. மொத்த இணையத்தையும் இந்த போராட்டம் முதலில் வென்றது. அதன்பின்தான் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இணையத்திலும், களத்திலும் மெரினா போராட்டம் போலவே இலங்கை இளைஞர்களும் ஆதிக்கம் செலுத்தியது மகிந்தவிற்கு எதிராக திரும்பியது.

கலவரம்
பல்வேறு காரணங்களால் மெரினா போராட்டம் கடைசி கட்டத்தில் கலவரத்தில் முடிந்தது. இலங்கை போராட்டமும் அதேபோல்தான்.. இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போரட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர். இதையடுத்து நடந்த மிகப்பெரிய மோதலில், இலங்கையில் தென்பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன... இரண்டு தன்னெழுச்சியான புரட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவத்தை கொண்டு இருப்பதுதான் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications