செந்தில் பாலாஜிக்கு இப்போது அளிக்கப்படும் சிகிச்சை என்ன! உடல்நிலை எப்படி இருக்கிறது? பரபர தகவல்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அங்கே வழங்கப்படும் சிகிச்சை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் கடந்த சில நாட்களாகவே பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டிற்கு சென்றனர்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி அதன் பிறகு அடுத்தடுத்து பகீர் நிகழ்வுகள் நடந்தன. அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: அமலாக்கத்துறை விசாரணையின் போது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நாளங்களில் அடைப்பு இருப்பதால் அவருக்கு ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடைப்பு காரணமாக அமைச்சருக்கு பைபாஸ் ஆப்ரேஷன் செய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவர் சுயநினைவுடனேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவர்கள் ஆலோசனைப்படியே உணவு மற்றும் மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
என்ன சிகிச்சை: ஐசியு பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இசிஜி, பல்ஸ் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் ஸ்டண்ட் பொருத்துவதற்குப் பதிலாக அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஒரு பக்கம் 90% மற்றொரு பக்கம் 80% அடைப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு இதே கருத்துகளைக் கூறியிருந்தனர்.
இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கட்டுகளைத் தவிர்க்கும் ஹெபாரின் ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடைப்பு காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனை பரிந்துரை அளித்திருந்தது. இருப்பினும், அவர் காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அங்கே ஆப்ரேஷன் செய்ய அனுமதி அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆப்ரேஷன்: இருப்பினும் நேற்றைய தினம் ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்பது போல அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது. ஒரு வேளை தனியார் மருத்துவமனைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஓமந்தூரார் மருத்துவமனையிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பொதுமக்கள் பலருக்கும் வெற்றிகரமாக இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கே தனியாக மருத்துவ வல்லுநர் குழுவும் உள்ளனர். ரோபோடிக் மூலம் அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு அங்கே வல்லுநர் குழு உள்ளனர். இதனால் ஒரு வேளை நீதிமன்றம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி தரவில்லை என்றால் அங்கேயே அறுவை சிகிச்சை செய்யப்படும்.












Click it and Unblock the Notifications