பந்தை எங்ககிட்ட அனுப்புங்க! டெல்லி கிரீன் சிக்னல்.. ஆளுநர் ரவியின் திடீர் மனமாற்றம்.. பரபர காரணம்!
சென்னை: நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆளுநரின் மனமாற்றத்திற்கு சில பின்னணிகள் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகிறது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றி ஆளுநர் அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு தரப்பிற்கு முறையாக அறிவிப்பு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சில கடைசி கட்ட குறிப்பு எழுதும் பணிகளை முடித்த பின் ஆளுநர் இதை டெல்லிக்கு அனுப்புவார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவார் என்று கூறப்படுகிறது

தேசிய டிரெண்ட்
இத்தனை நாட்கள் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல், தனது பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லி சொல்லியே கிடப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். இதனை கண்டிக்கும் விதமாக, ஆளுநரின் தேனீர் விருந்தை புறகணித்தது ஆளும் கட்சியான திமுக. திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. ஆளுநரின் தேனீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தது தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆனது.

ஆளுநர் நீட்
இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணியில் மாநில முதல்வரின் அதிகாரத்தை ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. இந்த 3 மாநிலங்களில் ஆளுநருக்கு மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்புகளை கொடுத்து வருகின்றன.

அதே பார்முலா
அதிலும் தெலுங்கானாவில் ஆளுநரை வரவேற்க கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே பார்முலாவை திமுக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக திமுகவிற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. இன்று அவையில் பேசிய போது கூட முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. அவரை நாங்கள் மதிக்கிறோம்.

ஸ்டாலின் பேச்சு
அவரின் பதவியை மதிக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் நல்ல உறவையே கொண்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்றுவது அவரின் கடமை. இந்த சட்டசபையை அவர் அவமதிக்க கூடாது. எங்களை தேர்வு செய்த மக்களை அவர் மதிக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து, முதல்கட்டமாக, ஆளூநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், இனி ஆளும் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்கிற முடிவை ஸ்டாலின் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

உணர்வுகளுக்கு மதிப்பு
தவிர, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் ஆளுநர் எங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை ; ஒன்றிய அரசு அவரை திரும்பபெற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நடப்பு பேரவை கூட்டத்திலேயே நிறைவேற்றி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது ஆளுநரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர் சட்டப்படி நடக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக நாங்களும் செயல்படுவோம் என்ற முடிவில் திமுக இருக்கிறதாம்.

விலக்கு மசோதா
மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராத கவர்னரை கண்டிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி அதனை மக்களிடம் கொண்டு செல்வது என்றும் ஸ்டாலின் தரப்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு திமுக கூட்டணி கட்சிகள் ஒரு படி மேலே போய் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டும் திட்டத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக பிளான்
இதற்கு பாஜகவும் பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுனரை செல்லும் இடங்களில் எல்லாம் பிரம்மாண்டமாக வரவேற்கும் திட்டத்தில் இருக்கிறதாம். இந்த விவகாரங்களை அறிந்த மத்திய அரசு, பந்தை எங்களிடம் அனுப்பி வையுங்கள்.. மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கவர்னருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில்தான் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது என கவர்னர் முடிவு செய்திருப்பதற்கான பின்னணிகளாக அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications